நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
நெசவாளர் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தது குறித்து...
பரமக்குடியில் நெசவாளர் வீட்டிற்குச் சென்ற திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சனிக்கிழமை (ஏப். 11) இரவு பரமக்குடிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு, பரமக்குடி திமுக வேட்பாளர் கே.கே. கதிரவனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பரமக்குடியில் உள்ள நெசவாளர் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், நெசவாளர் குடும்பத்துடன் கலந்துரையாடினார்.
Advertisement
நெசவாளருடன் அமர்ந்து சேலை தயாரிக்கும் முறையை கேட்டறிந்த முதல்வர், கைத்தறியில் நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, நெசவாளர்களின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தெளிச்சாத்தநல்லூர், காட்டுப் பரமக்குடி, ஓட்டப்பாலம் வழியாக பிரசார வாகனம் மூலம் ஐந்து முனை சந்திப்பு வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு திமுக வேட்பாளர்கள் கே.கே. கதிரவன் (பரமக்குடி (தனி), காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), காங்கிரஸ் கட்சி திருவாடானை தொகுதி வேட்பாளர் கரு. மாணிக்கம் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.