பகுதி - 876
அடியேன் கலைஞான..
‘அடியேன் கலைஞானங்களைப் பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித் 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் உள்ளன. ஆறாவது சீரில் மட்டும் ‘தனத்தத்’ என்றும் ‘தத்தத்’ என்றும் குழிப்பு மாறுபடுவதால் சில இடங்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன. இதைப்போலவே இரண்டாம் அடியின் முதற் சீரும் லேசான மாற்றத்தைக் கொண்டிருக்கிறது.
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
Advertisement
தனத்தா தனத்தத் தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் புகல்வாயே
ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுந்திட்
டுரைப்பார்கள் சித்தத் துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோ ணவெற்பிற்
றிருக்கோ புரத்திற் பெருமாளே.