முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (05.08.1945) - கருணை காட்டுங்கள்; கைதிகளுக்கான தூக்கு தண்டனையை மாற்றவும் - பாபு ராஜேந்திர பிரசாத் வேண்டுகோள்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிமூர் அஷ்டி கைதிகளுக்கு கருணை காட்ட வேண்டும் என்று பாபு ராஜேந்திர பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். தொழிற்கட்சி சர்க்கார் கருணை காட்டுமானால், நாடெங்கும் நல்லெண்ணம் ஏற்படும். அது நிலைமையை நிச்சயம் அபிவிருத்தி செய்யும் என்று அவர் சொன்னார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிமூர் அஷ்டி கைதிகளுக்கு கருணை காட்ட வேண்டும் என்று பாபு ராஜேந்திர பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். தொழிற்கட்சி சர்க்கார் கருணை காட்டுமானால், நாடெங்கும் நல்லெண்ணம் ஏற்படும். அது நிலைமையை நிச்சயம் அபிவிருத்தி செய்யும் என்று அவர் சொன்னார்.

அவர் மேலும் கூறியதாவது -

சிமூர் அஷ்டி கைதிகள் வழக்கில் அப்பீல் செய்துகொள்ள பிரிவியூ கவுன்ஸில் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால் 1942 இயக்கத்தின் விளைவாக எழுந்துள்ள அரசியல் வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கும் பிரச்னை மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது.

Advertisement

இதே மாதிரி இதர மாகாணங்களிலும் வழக்குகள் இருக்கின்றன. ஆனால், சிமூர் அஷ்டி கைதிகள் வழக்கு போன்ற அவ்வளவு பிரபல்யம் அடையவில்லை. ஆனால், இவர்களைப்போல அந்தக் கைதிகளும் கருணை காட்டவேண்டியவர்கள். தொழிற் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசியல் கைதிகள் விடுதலையை ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள். காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களின் விஷயம் உடனே கவனிக்கப்பட வேண்டியதாகும்.

தொழிற் கட்சி சர்க்கார் கருணை காட்டி தூக்கு தண்டனையை தீவாந்திர சிட்சையாகவோ, சிறைத் தண்டனையாகவோ மாற்றி தங்கள் ஆட்சியை சுபமாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்பது அதிகமாகாது. கைதிகள் விஷயத்தில் தாமதம் செய்வது கருணை மறுப்பதாகும்.

பலர் தூக்கிலிடப்பட்டுவிட்டனர். இன்னும் பலர் தூக்கிலிடுவதாக இருக்கிறது. பிஹாரில் பதுஹா வழக்கில் நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இரண்டரை வருஷ காலமாக காத்திருக்கிறார்கள். வேறு காரணத்துக்காக இல்லாவிட்டாலும் இவ்வளவு காத்திருந்ததற்காகவாவது இவர்களுக்கு கருணை காட்ட வேண்டும். மற்றொரு வழக்கில் பிரிவியூ கவுன்ஸில் அப்பீலும், வைஸ்ராய்க்கு அனுப்பிய கருணை மனுவும் பலன் தராமல் போய்விட்டன.

இம்மாதிரி வழக்குகளில் நீதியையும் கருணையையும் இணைத்து கைதிகளுக்கு கருணை காட்டினால், இந்தியாவின் பாமர மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நாடெங்கும் நல்லெண்ணம் பரவி நிலைமை நிச்சயமாக அபிவிருத்தி அடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments