இந்த நாளில் அன்று - (20.08.1961) - ஆன்மிக, லட்சியமற்ற கல்வி பூரணமானதல்ல - உப ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கருத்து
ஆன்மிக, தார்மிகக் கருத்துகள் பற்றி கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு பரிச்சயம் ஏற்படுத்தினாலொழிய, கல்வி பூரணத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியாது என்று உப ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆன்மிக, தார்மிகக் கருத்துகள் பற்றி கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு பரிச்சயம் ஏற்படுத்தினாலொழிய, கல்வி பூரணத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியாது என்று உப ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுதில்லியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிக் கட்டடத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார். ரூ.13 லட்சம் செலவில் இந்தக் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்லூரியை நிறுவுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தார் ரூ.12 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போதுள்ள சர்வதேச நிலைமையிலும் தேச நிலவரத்திலும் ஆன்மிக தார்மிக லட்சியங்கள் குறித்து ஓரளவு வலியுறுத்தி வரவேண்டியது அவசியமாகிறது. வாழ்க்கையில் எந்தவிதமான திட்டவட்டமான லட்சியமும் இல்லாததால், பல வாலிபர்களிடமும், யுவதிகளிடமும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தழைத்திருக்கவில்லை. யந்திர ரீதியில் கல்வியறிவு பெறுவதற்காக மட்டுமே தாங்கள் இருந்து வருவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
Advertisement
நாட்டின் தலைநகரில் வெங்கடேசுவரப் பெருமாள் பெயரைத் தாங்கிய ஒரு கல்லூரியை ஏற்படுத்துவது, மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானதல்ல. இந்த லட்சியத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், நாம் அதை நன்கு புரிந்துகொள்ளவில்லை. மதச்சார்பற்று இருப்பது என்பதற்கு, மதங்களே இல்லாமல் இருப்பது என்றோ, நாஸ்திகம் என்றோ அர்த்தமில்லை. எல்லா மதங்களிடமும் மரியாதை காட்ட வேண்டும் என்றே அது பொருள்படும்.
தற்போது இயற்கையின் ரகசியங்களை நாம் எவ்வளவோ கற்றுணர்ந்தபோதிலும், பாதுகாப்பின்மை, பரபரப்பு, அச்சம் போன்ற உணர்ச்சிகள் நம்மைப் பீடித்துள்ளன. இதற்குக் காரணம் விஞ்ஞானத்தை சரியானபடி புரிந்துகொள்ளாததே ஆகும். விஞ்ஞானம் என்றால் உண்மையைத் தேடும் முயற்சி என்றே அர்த்தம்.
இந்தப் புதிய கல்லூரி, மாணவர்களின் திறமையை வளர்த்தால் மட்டும் போதாது; சீலத்தையும், நற்பண்பையும் வளர்க்க வேண்டும். இந்தக் காலத்தில், திறமையைவிட நேர்மைக்குத்தான் அதிகத் தேவையிருக்கிறது என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.