இந்த நாளில் அன்று - (21.08.1962) - காங்கிரஸ் - அன்றும், இன்றும்: ராஜாஜியின் கருத்துகள்
காங்கிரஸ் எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்தாபனம். தரும புத்திரரைப் பின்தொடர்ந்து சென்று சுவர்க்கத்தில் புகுந்த நாயைப் போன்றது காங்கிரஸ். தரும புத்திரர் சில நிமிஷங்கள் நரகத்தில் தங்கியபோது, அந்த நாய் தர்மத்தின் பிரதிநிதியாக விளங்கியது.
சுதந்திரக் கட்சியின் தலைவரான ராஜாஜி, காங்கிரஸ் குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாவது -
காங்கிரஸ் எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்தாபனம். தரும புத்திரரைப் பின்தொடர்ந்து சென்று சுவர்க்கத்தில் புகுந்த நாயைப் போன்றது காங்கிரஸ். தரும புத்திரர் சில நிமிஷங்கள் நரகத்தில் தங்கியபோது, அந்த நாய் தர்மத்தின் பிரதிநிதியாக விளங்கியது.
ஏழைகளின் ஆடுகளைத் திருடரும் ஓநாய்களும் கவர்ந்து செல்லாமல் தடுத்து பாதுகாப்பு அளிக்கிறது நாய். அது ஒரு நன்றியுள்ள ஜந்து. ஆகவே, அதன்பால் அன்பு காட்டுகிறோம். ஆனால், நாய்க்கு வெறி பிடித்துவிட்டால், அதை நாம் வேறுவிதமாக நடத்துகிறோம். அந்த முறையிலேயே காங்கிரஸையும் நீங்கள் நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
Advertisement
பழமையும் புதுமையும்
முப்பது வருஷங்களுக்கு முன்பு காங்கிரஸில் உறுதியும், வீரமும், சத்ய நெறியும் வாய்ந்தவர்கள் இருந்தனர். ஆனால் இந்தக் காலத்திலோ, அத்தகையவர்களிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. நோயுற்ற நமது தாய் இறந்துவிட்டால், அவளை அன்புடனும் பக்தியுடனும் அடக்கம் செய்கிறோம். அவள் தாய் என்பதற்காக, அவளுடைய சடலத்தை அடக்கம் செய்யாமல் திறந்த வெளியில் துர்நாற்றம் வீசும்படி விட்டுவிட மாட்டோம். காங்கிரஸ் தற்போது கெட்டுப்போய்விட்டது.
கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு
காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே உள்ள கூட்டுறவை, வாதாபி, இல்வலன் என்ற அசுரர்களைப் பற்றிய பழைய கதைக்கு ஒப்பிடலாம். காங்கிரஸின் (அகஸ்தியர்) உடலில் புகுந்து, தகுந்த சமயத்தில் அதன் உடலைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடலாம் என்று கம்யூனிஸ்டுகள் கருதுகின்றனர்.
அதாவது, பண்டைய காலத்து அசுரனைப் போல சிலர் எந்த அபாயத்தையும் சமாளித்துவிடலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அபாயம் ஏற்படுகையில் நான் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டியதாக இருக்கிறது.
மகரிஷி அகஸ்தியர் எதையும் ஜீரணம் செய்யக்கூடிய சக்தி உள்ளவராக இருந்தார். ஆனால், காங்கிரஸார் இந்த ஆடுகளை (கம்யூனிஸ்டுகள்) ஜீரணம் செய்ய முடியாது.
முதலாவது 5 வருட திட்டம் கவர்ச்சியாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆனால், அது வரிப்பளுவை உண்டுபண்ணியதுடன், மேன்மேலும் அதை அதிகப்படுத்தியது. ஐந்தாண்டு திட்டத்தை, அழகான பெண்ணுருவம் கொண்டு ராமனையும் லட்சுமணனையும் வசீகரிக்க முயன்ற சூர்ப்பணகைக்கு ஒப்பிடலாம்.