முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (27.08.1969) - எம்.எல்.ஏக்கள் ஆஸ்தி விவரங்களைத் தர ஏற்பாடு - அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேறியது

மந்திரிகள், அசெம்பிளி சபாநாயகர், மேல் சபைத் தலைவர் உள்பட சட்டசபை மெம்பர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து விவரங்களை அவ்வப்போது அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அசெம்பிளி முடிவு செய்தது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

மந்திரிகள், அசெம்பிளி சபாநாயகர், மேல் சபைத் தலைவர் உள்பட சட்டசபை மெம்பர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து விவரங்களை அவ்வப்போது அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அசெம்பிளி முடிவு செய்தது.

இது சம்பந்தமாக முதலமைச்சர் மு.கருணாநிதி கொண்டுவந்த சர்க்கார் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

1967 மார்ச் 6-ம் தேதியிலிருந்தே இத் தீர்மானம் அமலுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

Advertisement

ஒவ்வொரு மெம்பரும் தனக்கும் சொந்தமான சொத்துக்கள் பற்றிய விவரங்களை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது. மெம்பர்களுக்கு எப்படி சொத்து சேர்த்தது என்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

1967 ஏப்ரல் 30-ம் தேதி, 1968 ஏப்ரல் 30-ம் தேதிக்கான விவரங்கள், 1969 ஏப்ரல் 30-ம் தேதிக்கான சொத்து விவரத்துடன் சேர்த்து 1969 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கலந்த பிறகு ஒழுங்குநியாதி உருவாக்கப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.

இந்தத் தீர்மானத்தில் கண்டுள்ளபடி இணைப்பான ஒரு சட்டம் கொண்டு வரும்படி இந்திய சர்க்காரைக் கேட்டுக்கொள்வது என்று சபை முடிவு செய்தது.

சொத்து விவரம் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்படும். இது பொது தாஸ்தாவேஜியாகக் கருதப்படும். 12 மாதங்களுக்கு ஒருமுறை ஆஸ்தி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

மெம்பர்களின் 1. ஸ்தாவர சொத்து, 2. வியாபார நலன்கள் - கம்பெனி பங்குகள், பாகஸ்தத உரிமை, கடன் பத்திரங்கள், 3. மற்ற நலன்களை - பாங்கு வட்டி, 4. நகை தங்கம், விலை உயர்ந்த கற்கள் (இவற்றின் மதிப்பு ரூ.10000-க்கு மேல் போனால்), 5. ஜங்கம சொத்து, 6. மெம்பர் தொடர்பு வைத்துக்கொண்டுள்ள டிரஸ்ட் விவரங்கள், 7. மெம்பரின் குறிப்புகள் விவரங்களில் இடம் பெற வேண்டும்.

மெம்பர் விரும்பினால் தமக்கும் தம்முடைய குடும்பத்துக்கும் உள்ள கடன் பொறுப்புகளையும் அந்த விவரத்தில் தெரிவிக்கலாம்.

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்துக்கான தகவலைத் தெரிவித்து ஒரு நமூனாவில் பூர்த்தி செய்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30-ம் தேதிக்கு முன்னதாக சபை காரியதரிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தனக்குச் சொந்தமான அல்லது ஈட்டிய அல்லது பிதுரார்ஜிதமாகக் கிடைத்த அல்லது தனது பெயரிலோ, தனது குடும்பத்தில் ஓர் உறுப்பினர் பெயரிலோ அல்லது குத்தகையின் மேல் அல்லது அடமானத்தின் மேல் வரப்பெற்ற சொத்துக்கள் அனைத்தும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும், அந்தச் சொத்துக்கள் எந்த வழியில் எதன் மூலமாக ஈட்டப்பட்டன அல்லது பிதுரார்ஜிதமாகக் கிடைத்தன என்ற விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும்.

குடும்ப உறுப்பினர் என்பது சட்டமன்ற உறுப்பினரின் அல்லது அவரது மனைவியின் அல்லது கணவரின் ரத்தத் தொடர்பான அல்லது திருமண வகையிலான உறவினர் என்றும், சட்டமன்ற உறுப்பினரையே சார்ந்து வாழ்பவர் என்று பொருள் படும்.

நிலைவியல் சொத்து என்பதில் நிலம், கட்டடங்கள் ஆகியவை அடங்கும். குறிப்புகள் என்னும் பத்தியில் உறுப்பினர் ஒருவர் சொத்துக்களை அடைந்த விதத்தை விவரித்து சுருக்கமான குறிப்பு ஒன்றைக் கொடுக்கலாம்.

உறுப்பினர் விரும்பினால், குறிப்புகள் என்னும் பத்தியில், தமக்கும் தம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட கடன் பொறுப்புகளையும் விவரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments