இந்த நாளில் அன்று(08.06.1997)தஞ்சை பெரிய கோயில் தீவிபத்து - பட்டாசுப் பொறியே காரணம் : முதல்வர் கருணாநிதி தகவல்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் யாகசாலை பந்தல் தீப்பற்றியதற்கு வாண வேடிக்கை தீப்பொறிதான் காரணம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலின் யாகசாலை பந்தல் தீப்பற்றியதற்கு வாண வேடிக்கை தீப்பொறிதான் காரணம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
இந்தத் தீவிபத்தில் இதுவரை 39 பேர் இறந்துள்ளனர். கோயிலின் இரு கோபுரங்களுக்கு இடையே யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டிருந்ததாலும், கோயிலின் சுற்றுச்சுவர் மக்கள் உடனடியாக வெளியேற முடியாதபடி தடுப்பாக இருந்ததாலும் மக்கள் நெருப்பில் சிக்கியுள்ளனர். தீயைவிட ஒருவர் மீது ஒருவர் பரபரப்பில் விழுந்து மிதிபட்டு பலர் இறந்துள்ளனர்.
பொதுவாக, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுத்தர குடும்பத்தினர்தான் வருவார்கள். ஆனால், இங்கே மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.
Advertisement
இரண்டு மூன்று தினங்கள் யாகம் நடைபெற்று பந்தல் ஓலைகள் மிகுந்த அளவு சூடேறிப்போயிருந்ததால் வாண வேடிக்கை நடத்தும்போது விழுந்த பட்டாசுப் பொறியால் உடனடியாக தீப்பிடித்து பரவியது.
யாகசாலை அமைத்திருந்த பகுதி தீயணைப்பு வாகனங்கள் ஒரு புறத்தில் இருந்துதான் தீயை அணைக்கும் அமைப்பில் இருந்தது. மூன்று தீயணைப்பு வண்டிகள் ஒரு மணி நேரம் தீயை அணைத்தும் இந்த உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.
எனினும், காவல்துறையினரும் அதிகாரிகளும் உள்ளே இருந்தவர்களை வேக வேகமாக வெளியேகொண்டு வந்து பெரும்பாலானவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றார் கருணாநிதி.