இந்த நாளில் அன்று(04.03.1954)வேலையின்மையை ஒழிக்க ரூ.74 கோடி செலவில் புதிதாக 313 திட்டங்கள் அங்கீகாரம்
இந்தியாவில் உள்ள பல்வேறு ராஜ்யங்கள், வேலையின்மை ஒழிப்பு சம்மந்தமாக சமர்ப்பித்த திட்டங்களை, மத்திய சர்க்கார் அங்கீகரித்திருப்பதாக மக்கள் சபையில் திட்ட மந்திரி ஸ்ரீ குல்ஸாரிலால் நத்தா இன்று தெரிவித்தார்.
இந்த நாளில் அன்று
(04.03.1954)
வேலையின்மையை ஒழிக்க ரூ.74 கோடி செலவில் புதிதாக 313 திட்டங்கள் அங்கீகாரம்
Advertisement
இந்தியாவில் உள்ள பல்வேறு ராஜ்யங்கள், வேலையின்மை ஒழிப்பு சம்மந்தமாக சமர்ப்பித்த திட்டங்களை, மத்திய சர்க்கார் அங்கீகரித்திருப்பதாக மக்கள் சபையில் திட்ட மந்திரி ஸ்ரீ குல்ஸாரிலால் நத்தா இன்று தெரிவித்தார்.
ராஜ்ய திட்டங்களில் சில திருத்தங்களும் அபிவிருத்திகளும் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்படி அபிவிருத்தி திட்டத்துக்காக 34 கோடி ரூபாயும் பற்றாக்குறை பிரதேசங்களை நிரந்தரமாக அபிவிருத்தி செய்ய 40 கோடி ரூபாயும் செலவிடவும் ராஜ்ய சர்க்காரின் யோசனைகளை அங்கீகரித்திருப்பதாக கூறினார். மொத்தம் 313 திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. ஐந்தாண்டு திட்டத்தில் அடங்கியுள்ளதைத் தவிர புதிதாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இவை. இதில் சென்னை ராஜ்யத்துக்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ரூ.2.64 கோடியும் நிரந்தர திட்டங்களுக்காக ரூ.6.2 கோடியும் கிடைக்கும்.
வேலையின்மை சம்பந்தமாக எடுக்கப்பட்ட ‘சாம்பிள்’ சர்வேயை பற்றி ஸ்ரீ நந்தா கூறுகையில், டில்லியைத் தவிர மற்ற இடங்களில் இருந்து இம் மாதிரியான சர்வேயின் முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், டில்லியிலிருந்து வந்த சர்வே மீதும் முடிவான அபிப்பிராயம் கூறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
புதிய யோசனைப்படி வேலையின்மை எந்த அளவுக்கு ஒழிக்கப்படும் என்ற கேள்விக்கு ஸ்ரீ நந்தா பதிலளிக்கையில், இது சம்பந்தமாக தோராயமான எஸ்டிமேட்டுகளே ராஜ்ய சர்க்காரிடமிருந்து கிடைத்திருப்பதாகச் சொன்னார். நல்ல பயிற்சி பெற்றவர், சுமாரான பயிற்சி பெற்றவர், பயிற்சியே பெறாதவர் ஆகியவர்களுக்கு எந்த அளவுக்கு வேலை கொடுக்க முடியும் என்பதை மதிப்பிடுவதற்கு தேவையான விவரங்களை ராஜ்ய சர்க்கார்களிடமிருந்து மத்திய சர்க்கார் கோரி இருப்பதாகவும் தெரிவித்தார்.