இந்த நாளில் அன்று(06.03.1957)என் வெற்றி மக்கள் வெற்றியே - தேர்தல் வெற்றிக்குப் பிறகு காமராஜ் முதல் பிரசங்கம்
தேர்தலில் வெற்றிபெற்ற பின் ஸ்ரீ காமராஜ் முதல் தடவையாக பேசிய கூட்டத்தில் தமது வெற்றி மக்களின் வெற்றியென்றும் மக்களிடமிருந்தே தாம் பலம் பெறுவதாகவும் கூறினார்.
இந்த நாளில் அன்று
(06.03.1957)
என் வெற்றி மக்கள் வெற்றியே - தேர்தல் வெற்றிக்குப் பிறகு காமராஜ் முதல் பிரசங்கம்
Advertisement
தேர்தலில் வெற்றிபெற்ற பின் ஸ்ரீ காமராஜ் முதல் தடவையாக பேசிய கூட்டத்தில் தமது வெற்றி மக்களின் வெற்றியென்றும் மக்களிடமிருந்தே தாம் பலம் பெறுவதாகவும் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தலில் எனக்கு எதிராகப் பலன் வாய்ந்த சக்திகள் சூழ்ந்துகொண்டன. தீய சக்திகள் எனக்கு எதிராக சதி செய்தன. என் மீது ஜனங்களுக்குள்ள அன்பும் ஆதரவுமே நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம். ஆகவே, உண்மையில் ஜனங்கள்தான் தம்மைப் பாராட்டிக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ்காரர்களுக்குத்தான் ஏழைகளின் கஷ்டம் தெரியும். ஏழைகளின் நலனைக் கவனிப்பதற்கு காங்கிரஸ்காரர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். நமது நாட்டில் ஏழைகள்தான் அதிகம் என்றும், பணக்காரர்கள் மிக மிக சொற்பம் என்றும் வோட்டாளர்களுக்குத் தெரியும். அதனால்தான் ஏழைகள் காங்கிரஸ்காரர்களை ஆதரிக்கின்றனர்.
அதிகப் பள்ளிக்கூடங்களும், ஆஸ்பத்திரிகளும் தேவை. பணக்காரர் குழந்தைகளைப் போலவே ஏழைக் குழந்தைகளும் புத்திசாலிகளே. அவர்களுக்கு வசதிதான் தேவை. பத்தாவது வகுப்பு வரை ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. எனது தலைமை பிடிக்காதவர்கள் எனது தொகுதியில் போட்டியிடலாமே. காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஏன் எதிர்க்க வேண்டும். காங்கிரஸை எதிர்த்த பணக்காரர்களுக்கும் சில நிலச்சுவான்தார்களுக்கும் பதில் கிடைத்துவிட்டது.
தங்கள் தொகுதிக்கு எதாவது உதவி தேவையாக இருப்பின் மற்ற கட்சியினரைப் போலவே எதிர்க்கட்சியினரும் என்னை அணுகுவது உண்டு. நான் அந்த உதவியைச் செய்தால் அது அவர்களுடைய சாதனை என்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். அந்த கௌரவம் சர்க்காரைச் சேர வேண்டியதேயல்லாமல் அவர்களுக்கு அந்த கௌரவம் அல்ல. அந்தப் பித்தலாட்டத்துக்கு அகப்படாமல் உங்களுடைய வோட்டுகளை காங்கிரஸுக்கே போடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார் காமராஜர்.