இந்த நாளில் அன்று(13.03.1965)ஸ்கூட்டரில் இருவர் செல்வதை தடை செய்யும் உத்தேசமில்லை: மந்திரி கண்டிப்பான பதில்
ஸ்கூட்டர்களில் இரண்டு பேர் சவாரி செய்யக்கூடாதென தடை விதிக்கும் உத்தேசம் சர்க்காருக்கு இல்லை என்று கைத்தொழில் இலாகா மந்திரி ஸ்ரீ ஆர்.வெங்கட்ராமன் அசெம்பிளியில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கண்டிப்பாகக் கூறினார்.
இந்த நாளில் அன்று
(13.03.1965)
ஸ்கூட்டரில் இருவர் செல்வதை தடை செய்யும் உத்தேசமில்லை: மந்திரி கண்டிப்பான பதில்
Advertisement
ஸ்கூட்டர்களில் இரண்டு பேர் சவாரி செய்யக்கூடாதென தடை விதிக்கும் உத்தேசம் சர்க்காருக்கு இல்லை என்று கைத்தொழில் இலாகா மந்திரி ஸ்ரீ ஆர்.வெங்கட்ராமன் அசெம்பிளியில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கண்டிப்பாகக் கூறினார்.
இப்போதுள்ள விதிகளின்படி ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்களில் உள்ள பிலியன் ஆசனத்தில் இன்னொருவர் பிரயாணம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. இந்த வசதியை மறுப்பது இம்மாதிரி வண்டிகளை உபயோகிப்பவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை விளைவிக்கும் என்று ஸ்ரீ வெங்கட்ராமன் கூறினார்.
சரியானபடி கை காட்டாமல் திடீரென்று திரும்புவதால்தான் சாதாரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன என்றார் அவர்.
ஒரு மெம்பர்: பிலியன் ஆசனங்களில் பிரயாணம் செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. இவர்கள் தமது இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் வைத்துக்கொண்டு போவதால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன. சைக்கிள் விடுவதுபோல் இரு புறங்களிலும் கால்களை வைத்துக்கொண்டால், பல விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
மந்திரி: இம்மாதிரி ஆராய்ச்சி எதையும் போக்குவரத்து இலாகா செய்யவில்லை.
கேள்வி: பெண்கள் அணிந்துகொள்ளும் புடவைகள் காரணமாகத்தான் விபத்துகள் ஏற்படுகின்றன. புடவைக்குப் பதிலாகப் பெண்கள் நிஜார் போட்டுக்கொள்ள வேண்டுமென்று சர்க்கார் யோசனை கூறுவார்களா? (சிரிப்பு).
சபாநாயகர்: பெண்களின் ஜீவாதார உரிமைகளில் நாம் தலையிட முடியுமா? (மேலும் சிரிப்பு).
மந்திரி அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.
கேள்வி: வண்டிகள் திடீரென்று திரும்பமுடியாமல் தடுக்க ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?
மந்திரி: அது சாத்தியமில்லையென்று நினைக்கிறேன்.
மற்றொரு கேள்விக்கு மந்திரி பதிலளிக்கையில் ஸ்கூட்டர்களில் இருவர் பிரயாணம் செய்யக்கூடாதென விதிகளைத் திருத்தும் உத்தேசம் இல்லை என்று கூறினார்.