இந்த நாளில் அன்று(21.05.1979)தஞ்சை லோக்சபா இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கருணாநிதி அறிவிப்பு
தஞ்சாவூர் தொகுதி லோகசபை உபதேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
தஞ்சாவூர் தொகுதி லோகசபை உபதேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
இந்திரா காந்தி போட்டியிடுவதாக செய்தி வந்த பின் மாவட்ட திமுக செயலாளர்களும் மற்றும் கழக முக்கியத் தலைவர்களும் நான் போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னையே இப்போது இல்லை என்று அவர்கள் நிருபர்களிடம் கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழக பார்லிமெண்டரி போர்டு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறும். அக்கூட்டத்தின் முடிவில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
Advertisement
இம்மாதம் 6-ம் தேதி தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் மகாநாட்டில் தாம் பேசியபோது எம்ஜிஆர் ஆதரவை நம்பி இந்திரா தேர்தலில் நிற்க வேண்டாம் என்று தாம் எச்சரித்ததாகக் கூறினார்.
எம்.ஜி.ராமச்சந்திரனைப் பிரதமர் தேசாய் மிரட்டியிருப்பார் என்று எண்ணுகிறீர்களா? என்று கேட்டதற்கு, அதற்கு கருணாநிதி, அப்படி மொரார்ஜி மிரட்டியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன் என்றார்.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிகளால் இந்திய அரசியல் வானில் எதாவது மாற்றம் ஏற்படுமா என்று கேட்டதற்கு, அப்படி மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், எப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்படும் என்பதை உடனடியாக நான் சொல்ல முடியாது என்று அவர் பதிலளித்தார்.
தாம் எதிர்த்துப் போட்டியிடக்கூடும் என்று அஞ்சி இந்திரா காந்தி தஞ்சை உப தேர்தலில் நிற்காது ஒதுங்கிக்கொண்டார் என்று கூறுவது தவறு. அதற்கு மாறாக, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் போக்கைக் கண்டு அஞ்சியே அவர் போட்டியிருந்து விலகிக்கொண்டார் என்று அவர் சொன்னார்.
இந்திரா காந்திக்கு எதிராகக் கருணாநிதியின் பாட்டனாரே போட்டியிட்டாலும் இந்திரா காந்தியைத் தோற்கடிக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.சுவாமிநாதன் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியைக் கருணாநிதி தம் பேச்சில் குறிப்பிட்டார்.
இது உண்மையானால், எம்.ஜி.ராமச்சந்திரன் பரிதாபகரமாகக் கைவிட்ட பிறகும் தஞ்சாவூர் தொகுதியில் ஏன் இந்திரா காந்தியை நிறுத்தவில்லை. அதற்கு ஏன் உங்களுக்குத் தைரியமில்லை என்று நான் சாமிநாதனைத் திருப்பிக் கேட்க முடியும். ஆனால், அவ்வாறு நான் கேட்க விரும்பவில்லை. ஏனெனில், ஏற்கெனவே ஆர்.வி.சுவாமிநாதன் மனத்தை எம்.ஜி.ராமச்சந்திரன் புண்படுத்திவிட்டார். வெந்த புண்ணில் வேலெடுத்துப் பாய்ச்ச நான் விரும்பவில்லை என்று கருணாநிதி கூறினார்.
ஆர்.வி.சாமிநாதன், பொறுப்பான தலைமைப் பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பவர் என்று எம்.ஜி.ராமச்சந்திரன் கூறியதற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.