இந்த நாளில் அன்று (30.05.1988)காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதென எதிர்க்கட்சிகள் டிக்ளேர் - கருணாநிதி அறிவிப்பு
தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து டிக்ளேர் செய்துள்ளோம் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து டிக்ளேர் செய்துள்ளோம் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
திமுக, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மக்கள் நல கோரிக்கை மாநாடு, சென்னையில் நடைபெற்றது. அப்போது கருணாநிதி இதுபற்றிக் கூறினார்.
தமிழ்நாட்டில் உடனடியாகத் தேர்தலை நடத்தக்கோரி திராவிட முன்னேற்றக் கழகம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இ.காங்கிரஸ் கட்சியின் அங்கமாகச் செயல்படும் போக்கை தமிழக ஆளுநர் கைவிட வேண்டும். 59-வது இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், மூடிய ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகச் சட்டமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கருணாநிதி பேசியதாவது -
விஜயவாடாவில் நடத்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் நான் கலந்துகொண்டது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஒரு கருத்து கூறியுள்ளார். விஜயவாடாவில் நடந்த சீட்டாட்டத்துக்கு ஒரு கை குறைந்ததால் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், கருணாநிதியை அழைத்தார் என்று மூப்பனார் கூறியுள்ளார். அவரவர் நடத்தைக்கு ஏற்பத்தான் உதாரணங்கள் வெளிவரும். சீட்டாட்டம் ஆடுபவர்கள் டிக்ளேர் செய்வது வழக்கம். அதுபோல், இங்கு காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதென்று விஜயவாடாவில் நடத்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் நாங்கள் டிக்ளேர் செய்துள்ளோம்.