இந்த நாளில் அன்று (01.06.1990)போரைத் திணித்தால் பயங்கர விளைவை சந்திக்க நேரிடும் - பாகிஸ்தானுக்கு குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் எச்சரிக்கை
இந்தியா மீது போரைத் திணித்தால், பயங்கரமான விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்று குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மீது போரைத் திணித்தால், பயங்கரமான விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்று குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய - திபெத்திய எல்லைப் பகுதியில், ராணுவ வீரர்கள், அதிகாரிகளிடையே அவர் பேசும்போது இந்த எச்சரிக்கையை அவர் விடுத்தார்.
எல்லைப் பகுதிகளில் அநாவசியமாக பதற்ற நிலையை பாகிஸ்தான் தோற்றுவித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர், எப்பாடுபட்டேனும் இந்தியாவின் நலனைக் காப்பாற்றத் தயங்கமாட்டோம் என்றார்.
பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்டால், இந்திய மக்கள் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி ஓரணியில் திரண்டு ராணுவத்துக்குப் பக்கபலமாக இருப்பார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்பைப் பொருத்தமட்டில், எங்களுக்கிடையில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார்.
இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டிவிடுகின்றபோதிலும், அவற்றைக் கண்டு எரிச்சலடையாமல் இந்தியா பொறுமையாக இருந்து வருகிறது. ஆனால், இதை இந்தியாவின் பலவீனம் என்று எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறினார்.
எல்லைப் பிராந்தியங்களில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்டு, அதன்மூலம் தோன்றும் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நேரடி மோதலில் இறங்கலாம் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் இந்த எண்ணங்கள் எதுவும் ஈடேறாது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவத்தின் திறமை அபாரமானது என்று வருணித்த அவர், சியாசின் பனிமுகட்டுப் பகுதிகளில், இந்திய ராணுவம் தீரம் நிறைந்த பணியை ஆற்றி வருகிறது என்றார். இலங்கையில் இந்திய ராணுவம் அளவிட முடியாத தியாகத்தைச் செய்துள்ளது என்று குடியரசுத் தலைவர் நினைவுகூர்ந்தார்.