முகப்பு
கண்ணோட்டம்

371 பாடகர்கள்; ஒரு பாட்டு!

கடந்த சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் சந்திரசேகர கல்யாண மண்டபத்தில் 92.7 பிக் எஃப்.எம். வானொலி சென்னை தினத்தைக் கொண்டாடியது. மரபும், நவீனமும், நாட்டுப்புறக் கலைகளும் பின்னிப் பிணைந்திருந்தன அன்றைய நிக

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:19 PM
பகிர்:

கடந்த சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் சந்திரசேகர கல்யாண மண்டபத்தில் 92.7 பிக் எஃப்.எம். வானொலி சென்னை தினத்தைக் கொண்டாடியது. மரபும், நவீனமும், நாட்டுப்புறக் கலைகளும் பின்னிப் பிணைந்திருந்தன அன்றைய நிகழ்ச்சியில். பத்மா சேஷாத்ரி பள்ளி, சரஸ்வதி நாட்டியாலயா, ஸ்ரீதேவி நிருத்தாலயா போன்ற பள்ளிகளிலிருந்து குழந்தைகள் பரதநாட்டியம், கும்மியாட்டம், காளிங்கநர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கினர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பிக் எஃப்.எம்.மின் தீனா, தனது நகைச்சுவையான பேச்சால் அரங்கத்தில் இருப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார். கர்நாடக இசைப் பாடகியும் திரையிசைப் பாடகியுமான சாருலதா மணி, கர்நாடக ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்களைப் பற்றி வழங்கிய சிறிய நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறன்றும் பிக் எஃப்.எம். வானொலியிலும் பகல் 11 மணிக்கு நடத்த இருக்கிறார்களாம்!

சென்னை தினத்திற்காக பாடலாசிரியர் சினேகனை ஒரு பாடல் எழுதவைத்து அதற்கு பால் ஜேக்கப்பை இசையமைக்க வைத்து மூன்று நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறது பிக் எஃப்.எம் வானொலி. அதில் சென்னையைச் சுற்றியிருக்கும் முக்கிய பகுதிகள் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படத்தைத் திரையிட்டு முடித்ததும், "சென்னையே நம் பெருமை; அதைக் காப்பது நம் உரிமை!' என்ற பாடலை, அபஸ்வரம் ராம்ஜியின் இசைப் பள்ளியைச் சேர்ந்த மழலைகளோடு மற்ற பள்ளிக் குழந்தைகளையும் பாடவைத்தது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

""இன்றைக்கு சில குழந்தைகள்தான் வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பாடலை சென்னையின் 371-வது பிறந்தநாளை முன்னிட்டு 371 குழந்தைகளைப் பாடவைத்துத்தான் பதிவு செய்திருக்கிறோம்!'' என்றார் பிக் எஃப்.எம்.மின் நிகழ்ச்சித் தலைவரான சிந்து விஜயகுமார். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனாலும் சென்னையின் பெருமையை விளக்கும் குறும்படத்தில் சென்னைக்குப் பெருமை சேர்க்கும் பல விஷயங்களையும் இன்னும் சேர்க்கவேண்டியது இருக்கிறது. சென்னையின் அடுத்த பிறந்த நாளுக்குள் சேர்த்துவிடுவார்கள் என்று நம்புவோம்!

முழு கட்டுரையைப் படிக்க →