ஜன்னல் நிலா: கவிஞர். கு. நா. கவின்முருகு.
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
காற்றோடு கீற்றாட கண்குளிர வீசுமொளி
ஆற்றோடை தண்ணீரில் ஆடிடுமே! - நாற்றாகி
நெஞ்சத்தில் சேர்ந்து நெகிழவும் வைக்குமே!
எஞ்சிய நேரமெல்லாம் ஏந்திழையும் - மஞ்சம்சேர்
முற்றத்தில் வந்த முழுநிலவோக் காய்ந்திடவே
சுற்றமொடு சேர்ந்து சுவைத்திடப் - பற்றிக்
களித்திடக் காய்ந்திடும் கானமழைப் போலே
அளித்திடுமே அன்பனைய யாவும்! - குளிர்ந்து
மகிழ்ந்திடவே என்னருகில் மார்பணைவாய் பெண்ணாய்
முகிழ்த்திடவே சேர்ந்த முகிலுமே! - ஆகிடுமே
நானணைக்கும் காதலாலே ஞாலமெல்லாம் நீயுமெண்ணில்
வாளைக் குமரியாய் வந்திடுவாய் - வேளை
மயங்கிடவே சேர்ந்திருக்க வந்துவிடு என்னுள்
தயங்கிடாது உள்ளம் தயைந்து.!