தண்ணீருக்கு இரத்தம்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தர்மம் என்றனர் அன்று,தண்ணீர் கேட்டால் பகை கொண்டனர் இன்று.போகும் வழியெல்லாம் ஆறு, குளம் வெட்டி போய்ச் சேரும் முன் புண்ணியம் தேடினர் அன்று,காவிரி நீர் கேட்டதற்காக, பிழைக்க வந்த மக்களை கருணையின்றி அடித்துக் காயப்படுத்துகின்றனர் இன்று.தன் குழந்தைகள் அனைவருக்கும் பாகுபாடின்றி அள்ளித் தரும் தாய் போலன்றி ,செல்வங்களை விரித்தும், சுருக்கியும் மனிதர்களுக்கு இறைவன் வழங்கியுள்ளது இல்லாதவர்க்குஈயும் இதயம் கொள்வதற்கேயாம்.பலருக்கு அளவின்றியும், சிலருக்கு அளந்தும் வளங்களைத் தந்ததும் இயற்கையின் குற்றமன்று.என் நாட்டினர் எல்லோரும், என் சொந்தம் என்றும்,எனக்குரியது , உனக்கும் உரியதென ஒவ்வொருவர் நெஞ்சிலும் நேசம் இருக்கும் வரையில் மக்களின் மனதில் மட்டுமல்லாது, நீர்நிலைகளிலும் என்றும் ஈரம் வறண்டு போகாது.