வாழ்க்கையெனும் போர்க்களம்: நெருப்பலைப் பாவலர். இராம இளங்கோவன்
கல்லெடுத்து நா(ர்)உறிப்பார்;
காற்றினையும் நஞ்சாக்கிப்
பொல்லாத செயல்விளைப்பார்;
புண்ணில்வேல் பாய்ச்சிடுவார்;
எல்லோர்க்கும் உள்ளவற்றை
எனக்கென்று பறித்திடுவார்;
வல்லமையால் தீங்கிழைக்க
வாழ்வுபோர்க் களமாகும்!
பொதுவான விடியலினைப்
பதுக்கிடுவார் தனதென்று;
மதுவினிலே குடியிருப்பார்;
மாண்புகளைக் கற்பழிப்பார்;
பதுமையெனப் பேசிடாத
பாமரரின் உழைப்புறிவார்;
சதுரங்கக் காய்களாக
சாகடிப்பார் நல்வினைகள்!
இயல்பான இயற்கைவளம்
இயன்றவரை திருடிடுவார்;
செயற்கைகளால் மண்ணுயிரைச்
சிதைத்திடுவார்; நலங்கெடுப்பார்;
வயல்பயிராய்த் தீவினைகள்
விளையவைத்து உயிரறுப்பார்;
பழியாகி வாழ்க்கையெனும்
போர்க்களமாய் மாறிற்றே!
கல்லாரும் இல்லாரும்
செல்வந்தர் அரசியலார்
பொல்லாரும் உள்ளதனால்
எல்லையில்லா வேறுபாட்டில்
நல்லறத்து வாழ்க்கையெனும்
நிலமின்று போர்க்களமாய்
அல்லலுறும் நிலையதனை
அமுதமென மாற்றுவமே!