முகப்பு
கவிதைமணி

யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா

Updated On : 21 மே, 2018 at 3:41 PM
பகிர்:

இயற்கைச் சோலைகளின்மேல்
பாலைப் போர்வையைப் போர்த்தும்
பன்னாட்டு ஆலைகள்
சுதந்திரமாய் பரவுகின்றன
சுதந்திர இந்தியாவில்!

யாருக்கு கிடைத்தது
உண்மை சுதந்திரம்?

கொள்ளையடிக்க
இரவில் கிடைத்த சுதந்திரம்
வெள்ளையனுக்கும்
கொள்ளையனுக்கும்!

Advertisement

நாட்டின் வளத்தை அரிக்கும்
இமயமென படர்ந்தோங்கியிருக்கும்
ஊழல் கரையான்புற்றுகள்!

தங்கச் சம்பாவாய்
திருடும் மணல்
ஆயிரமாயிரம் கோடிகளை
விளைவிக்க…
பாலையாய் ஆறுகள்
கானல் நீராய் விவசாயம்!

நீர் வங்கியாய்
நின்ற அணைகள்…
வாக்கு வங்கிகளாய்!

கண்ணீர் கடலில்
வாக்கு முத்தெடுக்கும்
அரசியல்வாதிகள்!

எரிபொருள் புகையில்
திரிதிரியாய் தெரிகின்றன
வறியவர்களின் வயிறும்
கொள்ளையர்களின்
கறுப்புப் பணமும்!
ஐம்பூதங்களையும்
கொள்ளையடிக்கும்
பணப்பூதங்களின் கரங்களில்
உயிருக்குப் போராடும்
மக்களாட்சி!

கழுத்தை நெரிக்கும்
கயவர்களின்முன்
எடுபடாமல் போகும்
போடும் கூப்பாடு!

நிமிர்ந்து
நெடிலாய் நின்ற நீதி…
சுயநலத்தால் குறுகி
தலைசாய்கிறது
குறிலாய்!

விற்கப்படும்
மனசாட்சிகளும் கடமைகளும்
நியாயமாய் நிற்கின்றன
விலைபோகும் சதவீதத்திற்கு!

கறைகளை மறைக்க
வெள்ளாடையை அணிந்து
திரியும் களவாணிகள்…
கணவான்களாய் இந்நாட்டில்!
யார் இட்ட சாபம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.