நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

அவற்றைப் படைத்தான்

செ.குளோரியான்

பாடல் - 1

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்
                                                                                             படைத்தான்,
குன்றம்போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே.

அன்றைக்கு, தேவர்கள், உலகம், உயிர், மற்ற எதுவும் இல்லாத நேரத்தில், எம்பெருமான் அவற்றைப் படைத்தான், நான்முகனான பிரம்மனையும் பிற தேவர்களையும் இந்த உலகையும் உயிர்களையும் உருவாக்கினான், குன்றுபோல் அழகிய மாடங்கள் உயர்ந்துநிற்கும் திருக்குருகூரிலே அப்பெருமான் ஆதிப்பிரானாக நிற்கிறான், பிறகு எதற்கு நீங்கள் வேறு தெய்வங்களை நாடுகிறீர்கள்? (அவனையே வணங்குங்கள்).

******

பாடல் - 2

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்
                                                                                 படைத்தான்,
வீடுஇல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான், அவன் மேவி
                                                                                 உறைகோயில்,
மாடமாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடிப் பரவிச் செல்மின்கள், பல்லுலகீர், பரந்தே.

நீங்கள் நாடிச்சென்று வணங்குகிற தெய்வங்களையும் உங்களையும் முன்பே படைத்தவன் எம்பெருமான், குறையாத சிறப்பும் புகழும் நிறைந்த ஆதிப்பிரான், அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், மாடமாளிகைகள் சூழ்ந்து அழகுசெய்யும் திருக்குருகூர், இந்த உலகில் உள்ள பலப்பல மக்களே, அந்தத் திருக்குருகூரைப்பற்றிப் பாடுங்கள், ஆடுங்கள், போற்றியபடி அங்கே சென்று வணங்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT