பாடல் - 3
நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
நீள் நெடும்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவைபோல்வனவும்
பிறவும்
புகர்கொள் சோதிப்பிரான்தன் செய்கை நினைந்து
புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என்
இனி நோவதுவே?
எம்பெருமான் ஒப்பற்ற மல்லர்களை வென்றான், பசுக்கூட்டங்களை மேய்த்தான், நீண்ட கைகளைக்கொண்ட, சிகரம்போன்ற, பெரிய குவலயாபீடம் என்ற யானையை வென்றான், இன்னும் பல திருச்செயல்களைச் செய்தான், மிகுந்த ஒளிமயமான அந்தப் பெருமானின் திருச்செயல்களை நாள்தோறும் எண்ணுகிறேன், புலம்புகிறேன், பக்தியை அனுபவிக்கிறேன், எனக்கு இனி என்ன வருத்தம்? (ஏதுமில்லை.)
***
பாடல் - 4
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்,
வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும், ஊர் சகடம் இறச் சாடியதும்,
தேவக் கோலப்பிரான்தன் செய்கை நினைந்து மனம்
குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி
வேண்டுவதே?
யசோதைப்பிராட்டி கண்ணனை உரலோடு சேர்த்து இழுத்துக் கட்ட, அப்போது உடல் வருந்தி அழுதான் அவன், வஞ்சகமாக வந்த பூதனை என்கிற பெண் சாகும்படி அவளுடைய பாலை உண்டான், சக்கரமாக ஊர்ந்துவந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்தான், அழகிய தேவர்பெருமானான அப்பிரானின் செயல்களை நினைத்து, மனம் குழைந்து வாழும் வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது. இனி எனக்கு வேறென்ன வேண்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.