பாடல் - 7
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்
தான் பிறந்து
தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன
சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடிமாலை மார்பன், என்
அப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சு உடையேன், எனக்கு இனி
யார் நிகர் நீள் நிலத்தே.
தன் பக்தர்கள் அடையும் துயரங்களைக்கண்டு மனம் வருந்திய எம்பெருமான், அவர்களுக்காக அழுக்கு மானிட சாதியில் வந்து பிறந்தான், தான் விரும்பும் உருவத்தைப் பெற்றான், பக்தர்களைத் துன்புறுத்துவோரை அழித்தான், அதன்மூலம் தன்னுடைய கோபத்தைத் தணித்துக்கொண்டான், அத்தகைய பெருமான், புனத்திலே விளைந்த திருத்துளசியைத் திருமுடியிலே, திருமார்பிலே
மாலையாக அணிந்தவன், என் அப்பன், அவனுடைய மாயங்களையே நான் நெஞ்சால் நினைக்கிறேன். இந்த நீண்ட உலகத்திலே இனி எனக்கு நிகர் யார்?
***
பாடல் - 8
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட
மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன், என்
அப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன், எனக்கு இனி என்ன
கலக்கம் உண்டே?
எம்பெருமான் வாமனனாக அவதாரம் எடுத்து மாவலியிடம் நிலத்தைப் பெற்றான், அத்தகைய என் அப்பன், நீண்ட நிலத்தில் வாழ்கிறவர்களும், வானுலகில் வாழ்கிறவர்களும் வியக்கும்படி பெரிய போரைச் செய்து வாணாசுரனின் ஆயிரம் தோள்களைத் துண்டித்தான், இவ்வாறு அவன் செய்த மற்ற பல மாயங்களையே காணும் நெஞ்சு எனக்கு வாய்த்திருக்கிறது, இனி எனக்கு என்ன கலக்கம்? (ஏதுமில்லை.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.