பாடல் - 3
என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என்
செய்கின்றாய்,
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்,
கன்ஆர் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய், அடியேன் அரு
வாழ் நாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே.
எம்பெருமானே, நான் என்ன செய்வேன்? எனக்கு உன்னையன்றி யார் துணை? (யாருமில்லை). நீ என்னை என்ன செய்கின்றாய்? உன்னையன்றி இன்னொருவரிடம் சென்று நான் என்னுடைய குறைகளைச் சொல்லமாட்டேன், வேலைப்பாடுகள் நிறைந்த மதிளால் சூழப்பட்ட திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, என்னுடைய மீதமுள்ள வாழ்நாள் முழுவதும், உன்னுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டே நான் செல்லவேண்டும், அதற்கு நீ அருள்புரியவேண்டும்.
*******
பாடல் - 4
செலக்காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்,
உலப்பு இலானே, எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி,
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய், உன்னைக்
காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன், தொழுவனே.
மேலே மேலே காணவல்லவர்கள் எந்த அளவு காண்பார்களோ, அதைத்தாண்டியும் செல்லும் புகழைக்கொண்டவனே, நற்குணங்களுக்கு எல்லையில்லாதவனே, எல்லா உலகங்களையும் கொண்ட தனி மூர்த்தியே, பக்தி நலம் மிகுந்தவர்கள் வாழ்கிற திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, உன்னைக் காண்பதற்காக நான் ஆகாயத்தை நோக்கி மயங்குகிறேன், அழுகிறேன்,
தொழுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.