பாடல் 3
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்?
இணை முலை நமுக நுண் இடை நுடங்கத்
துனி இரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எமை இட்டு அகல் கண்ணன், கள்வன்,
தனி இளம் சிங்கம், எம் மாயன் வாரான்,
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ.
எம்பெருமான் கண்ணன், என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், தனக்கு ஈடாக ஒருவரும் இல்லாத இளம் சிங்கம், எங்கள் மாயன், அவன் என்னுடைய இரு மார்பகங்களும் குழையும்படி, சிறிய இடை தளரும்படி என்னோடு கலந்தான், அது துக்கத்தைத் தரும் கலவியாக இருந்தது, ஏனெனில், அவன் அவ்வாறு என் மெய்யோடு கலந்தபிறகு, என்னை விட்டுச் சென்றுவிட்டான், இப்போது, அவன் இங்கே வர மறுக்கிறான், அவனுடைய தாமரைபோன்ற திருக்கண்களும், சிவந்த திருவாயும், கருத்த, குளிர்ந்த, நீண்ட குழல்களும், நான்கு திருத்தோள்களும் பாவியாகிய என்னுடைய மனத்தில் நின்று அறுக்கின்றன. நான் இனி என் உயிரை எப்படிக் காத்துக்கொள்வேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.