7. வெறிவிரவு கூவிள - பாடல் 11
உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப்பட்டாலும்,
பாடல் 11
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப்பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தைகைய சேவைகளில் ஒன்றுதான் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. சமண சமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தைகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும்போது ஏற்படும் வழியினைப் பொறுத்துக்கொண்டு கண்களில் நீர் வாராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப்படுவார்கள். கொன்றை மலர்கள் மலரும் பருவத்தில், அவை கொத்தாக மலர்ந்து மரத்தில் உள்ள இலைகளை மறைக்கும் அளவுக்கு, மிகவும் அதிக அளவினில் பூக்கும் என்ற செய்தியை, அப்பர் பிரான் இங்கே இலைகளை மறைக்கும் கொன்றை மலர்கள் என்று கூறுகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நீராடாமல் மாசு படிந்து காணப்படும் தங்களது உடலின் மார்பகங்களை உடையால் மறைக்கும் சமணப் பெண் துறவிகள், தாங்கள் பெரும் தெய்வமாக மதித்து கருதும் ஆண் துறவிகளின் தலையில் உள்ள முடியினை பறித்து சேவை செய்வார்கள். இந்தச் செயலைப்போன்று, பல செயல்களைத் தங்களது கொள்கைகளாக கருதி, தவம் செய்வதாக நினைத்து பாவச் செயல்களைச் செய்து வரும், சமணத் துறவிகள் சிவபெருமானின் பெருமைகளையும் அவரையும் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் காட்டிய வழியிலே சென்ற நானும், தனது பயணத்திற்கு இடையூறாக இருந்தது என்று நினைத்து கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் ராவணனின் ஆற்றலினை அழித்தவனும், மரத்தில் உள்ள இலைகளை முற்றிலும் மறைக்கும் அளவுக்கு அடர்த்தியாக பூக்கும் கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் ஆகிய, சிவபெருமானை நான் பண்டைய நாட்களில் இகழ்ந்தேன். எனது அறிவீனமான செயல் பரிதாபத்திற்கு உரியது.</p><p align="JUSTIFY"><strong>முடிவுரை</strong></p><p align="JUSTIFY">இந்த பாடலில் அப்பர் பிரான் சமணர்களை சாடாமல், அவர்களைப் பின்பற்றி தான் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி நாணம் அடைந்து வருந்தி குறிப்பிடுவதை நாம் உணரலாம். அவ்வாறு தான் இருந்த நாட்களில் தான் செய்த செயல்களை குறிப்பிடும் அப்பர் பிரான், சமணர்களைப் பற்றி இகழ்ந்து ஏதும் சொல்லாத நாகரிகத்தை நாம் அவரது பாடலில் காணலாம்.</p><p> </p>
Advertisement