திரைக்கதிர்
சீதா ராமம், 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர்.
'சீதா ராமம்', 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் 'டகாய்ட்' வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் பேசியபோது, 'பெரிய இயக்குநர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் தரும் ஆஃபர்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கனத்த இதயத்துடன் நான் வேண்டாம் என்றே சொல்லி விடுவேன்.' என்று தெரிவித்திருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைகோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.
Advertisement
மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது படக்குழு டைட்டிலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி படத்துக்கு 'ராக்கா' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'எல்.ஐ.கே' திரைப்படம், தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸôக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது இந்தப் படம்.
கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் சீமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சீமான் குறித்து கீர்த்தி ஷெட்டி பேசும் போது, 'சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும்.
செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைத்தான் அவர் உபயோகப்படுத்துவார். எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார். இந்த விஷயம் பற்றியெல்லாம் அப்போது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. இப்போது புரிகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் 'நீளிரா' படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. இலங்கையின் போர் பதற்றச் சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சோமிதரன் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இந்தப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா விடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், 'நீளிரா' என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். இப்போது நடந்துகொண்டிருக்கும் போராலேயே நம் அன்றாட வாழ்வுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அதில் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான். எனக்கு இந்தப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
'நீளிரா' படத்தை தியேட்டருக்குச் சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!' என்று படத்தைப் பாராட்டி இருக்கிறார்.