8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 9
ஐந்து புலன்களால் அவதிப்படாத மனிதர் எவரும் இல்லை. ஐந்து புலன்கள் தரும் அவதியால் இறைவனை நாம் நினைக்க முடியாமல்,
ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும் அதனுள்
வென்ற ஐம்புலன்கள் தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்
நன்றவன் நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று
அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகை வீரட்டானாரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஐந்து புலன்களால் அவதிப்படாத மனிதர் எவரும் இல்லை. ஐந்து புலன்கள் தரும் அவதியால் இறைவனை நாம் நினைக்க முடியாமல், புலன்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நமது காலத்தையும் சக்தியையும் செலவிடுகின்றோம். எனவே நாம் அனைவருமே ஐந்து புலன்களை அடக்கி, அவற்றை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதனைத்தான் இங்கே அப்பர் பிரான், ஐம்புலன்கள் தம்மை விலக்குவதற்கு உரியீர் என்று நம்மை அழைத்து குறிப்பிடுகின்றார். அவ்வாறு ஐந்து புலன்களை அடக்கி ஒன்றிய மனத்துடன் இறைவனை நினைத்தால் நமக்கு காட்சி தருவார் என்று கூறும் இந்த பாடல் நமக்கு தில்லைப் பதிகத்தின் ஒரு பாடலை (4.81.2) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் மனம் ஒன்றி நாம் இறைவனை நினைத்தால் நாம் இழப்பது ஏதும் இல்லை என்றும், தில்லை சிற்றம்பலத்து இறைவன் புன்முறுவலுடன் நம்மை வரவேற்று பேசுவான் என்றும் கூறுகின்றார். ஊனம் என்பதற்கு பிறவிப் பிணி என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அனைத்து உயிர்களும், தங்களது வினைத் தொகுதியின் காரணமாக, இறந்த பின்னரும் மறுபடியும் பிறப்பெடுக்கும் நிலையில் உள்ளன. இந்த நிலை தான் உயிர்களைப் பீடித்துள்ள மிகப்பெரிய நோய் என்பதால் இதனை உயிர்களின் ஊனம் என்று நாம் கொள்ளலாம். இந்த ஊனத்தை நீக்கி, மறுபடியும் நாம் பிறவாமல் இருக்க வேண்டும் என்றால், சிவபிரானை நாம் நினைத்துத் தொழ வேண்டும் என்பதே இந்த பாடலின் கருத்து.</p><p align="JUSTIFY">ஒன்றி இருந்து உணர்மின்கள் உந்தமக்கு ஊனமில்லை<br />கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்<br />சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்<br />என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">ஐந்து புலன்களின் பிடியிலிருந்து விடுபட்டு, அவற்றின் வழி செல்வதை விலக்கவேண்டிய நிலையில் உள்ள மனிதர்களே, நீங்கள் மனம் ஒன்றி, ஓங்காரத்தின் உட்பொருளாக விளங்கும் சிவபிரானை தியானித்தால், திருமாலும் பிரமனும் காண்பதற்கு மிகவும் அரியவனாக விளங்கிய சிவபெருமான், உங்களுக்கு காட்சி நல்குவார். அவர் தான் அதிகை வீரட்டானத்தில் உறைகின்றார்.</p>