முகப்பு
தினம் ஒரு தேவாரம்

45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 5

வெண்மை நிறத்தில் பிரகாசித்த சந்திரன்

Updated On : 6 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:20 AM

சுருள் உறு வரையின் மேலால் துளங்கி இளம் பளிங்கு சிந்த
இருள் உறு கதிர் நுழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருள் உறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த
மருள் உறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே

விளக்கம்

சந்திரனின் ஒளி பயிர்களை வளரச் செய்கின்றன என்ற செய்தி இங்கே கூறப்படுகின்றது. சுருள் = வளைவு. வரை = மலை, இங்கே மலைச்சிகரம். பளிங்கு = பளிங்கு போன்று ஒளிவீசும் சந்திரம். இருளுறு கதிர் = இரவு நேரத்தில் நிற்கும் நெற்பயிர். பசலை = பசுமையான. அங்கை = அழகிய கை. மருளுறு கீதம் = மருள் எனப்படும் பண், குறிஞ்சி நிலத்திற்கு உரியது. இந்தளம் பண்ணினை மருள் என்பார்கள். அழகிய கைகள் என்று குறிப்பிட்டதாலும், கீதங்கள் பாடினார்கள் என்று சொல்வதாலும், அடியார்கள் என்ற குறிப்பு பெண் அடியார்களை உணர்த்துவதாக நாம் கொள்ளலாம்.

Advertisement

பொழிப்புரை

மலையின் சிகரம் போன்று முடியப்பட்டதும், சுருண்டு வளர்ந்ததும் ஆகிய சடையிலே அமர்ந்து பளிங்கு போன்று வெண்மை நிறத்தில் பிரகாசித்த சந்திரன், தனது கதிர்களால் இரவு நேரத்தில் இருண்டு காணப்பட்ட வயல்களில் நின்ற நெற்கதிர்களின் வளர்ச்சிக்கு உதவும் தலமாகிய வலம்புரத்தில், பெருமானது அருளினை அடைய விரும்பும் பெண் அடியார்கள் தங்களது அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நின்றவாறு அவர்கள் குறிஞ்சி நிலத்திற்கு உரிய இந்தளம் இசைப் பண்ணில் இனிய பாடல்கள் பாட, அந்த பாடல்களை கேட்டு இன்புற்ற வண்ணம் வலம்புரத்து அடிகள் இங்கே உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.