45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 8
வலம்புரத்து தலத்தில் உள்ள நெல் வயல்களில்
அருகு எலாம் குவளை செந்நெல் அகலிலை ஆம்பல்
நெய்தல்
தெருவெலாம் தெங்கு மாவும் பழம் விழும் படப்பை
எல்லாம்
குருகினம் கூடி ஆங்கே கும்மலித்தி இறகு உலர்த்தி
மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே
விளக்கம்
படப்பை = வீட்டுத் தோட்டங்கள். குழுமி ஒலித்து என்ற தொடர் கும்மலித்து என்று மருவியது. குருகினம் = பறவை இனங்கள்.
பொழிப்புரை
வலம்புரத்து தலத்தில் உள்ள நெல் வயல்களில், நெற்கதிர்களின் இடையே அகன்ற இலைகளை உடைய ஆம்பல், குவளை மற்றும் நெய்தல் மலர்களும் பூத்துள்ளன. எல்லாத் தெருக்களிலும் தென்னை மரங்களும் மாமரங்களும் ஓங்கி வளர்ந்துள்ளன. வீட்டுத் தோட்டங்களில் பழங்கள் பழுத்து கீழே விழுகின்றன.
Advertisement
இவ்வாறு பழங்கள் அதிகமாக பழுத்து காணப்படும் இடங்களில், பறவைகள் கூட்டமாக குழுமி ஒலித்து, தங்களது இறகுகளை அசைத்து அசைத்து உலர்த்திக் கொள்கின்றன. இவ்வாறு நீர்வளமும் நிலவளமும் நிறைந்த வலம்புரம் தலத்தில் வலம்புரத்து உகந்து உறைகின்றார்.