45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 10
ஒளி வீசும் நீண்ட கோரைப் பற்களைக் கொண்ட
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ் அன்று
தோளொடு பத்து வாயும் தொலைத்து உடன் அழுந்த ஊன்றி
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே
விளக்கம்
வளர் கயிலாயம் = உயர்ந்து வளர்ந்த கயிலாய மலை. வாள் = ஒளியுடன் விளங்கும். எயிறு = கோரைப்பல். நக்கு = சிரித்து. அரக்கன் ராவணன், கயிலை மலை நோக்கிச் சென்றபோது சிரித்தவாறு சென்றதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தனது வலிமையின் மீது எண்ணற்ற செருக்கு கொண்டிருந்த ராவணன், தனது வழியில் குறுக்கிட்ட கயிலை மலையினை பேர்த்தேடுப்பது, தனக்கு மிகவும் எளிதான செயல் என்று நினைத்து சிரித்தான் போலும்.
Advertisement
பொழிப்புரை
ஒளி வீசும் நீண்ட கோரைப் பற்களைக் கொண்ட அரக்கன் ராவணன், தனது வலிமையின் மீது கொண்டிருந்த எண்ணற்ற செருக்கினால், தனது வழியில் குறுக்கிட்ட கயிலை மலையை பேர்த்தெடுப்பது, தனக்கு சிறுபிள்ளையின் விளையாட்டு போன்று மிகவும் எளிதான செயல் என்ற எண்ணத்தில் சிரித்தவாறே கயிலை மலையை நோக்கிச் சென்றான். அவ்வாறு சென்ற அரக்கன் ஓங்கி வளர்ந்த கயிலை மலையை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அவனது இருபது தோள்களும் பத்து வாய்களும் மலையின் கீழே நசுங்கி தொலைந்து அழுந்துமாறு தனது கால் பேரு விரலால் மலையை அழுத்தி, அரக்கனது வீரத்தையும் வலிமையையும் அடக்கியவர் வலம்புரம் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவார்.
முடிவுரை
பொதுவாக அப்பர் பிரானின் பாடல்களில் இயற்கை வருணனை, திருஞான சம்பந்தரின் பதிகங்களில் காணப்படுவது போன்று இடம் பெறுவதில்லை. ஒரு சில அப்பர் பிரானின் பாடல்களில் காணப்படும் இயற்கை காட்சிகள் பற்றிய குறிப்புகள், அவரது கவிநயத்தை நமக்கு உணர்த்துகின்றன.
இந்த பதிகத்தின் பாடல்களில் இயற்கை காட்சிகளை அப்பர் பிரான் சுவையுடன் நமக்கு அளிப்பதை நாம் உணரலாம். தலத்து இறைவனை அடியார்கள் வழிபட்ட காட்சியைக் கண்டு களித்து, அந்த காட்சிகளை நமக்கு பதிகத்தின் முதல் ஐந்து பாடல்கள் உணர்த்தும் அப்பர் பிரான், தலத்தில் தான் கண்ட இயற்கை காட்சிகளையும் நமக்கு உணர்த்தும் வித்தியாசமான பதிகம். பதிகத்தின் ஏழாவது பாடலில், மீன்கள் நீராடும் இளம் பெண்களின் செழுமையான மார்பகங்களை கனிகள் என்று தவறாக நினைத்து, அந்த கனிகளின் மேல் மோதும் காட்சியை விவரிக்கும் அப்பர் பிரான், ஐந்தாவது பாடலில் சந்திரனின் ஒளி உதவியுடன் நெற்கதிர்கள் செழுத்து வளரும் நிலையையும், இரண்டாவது பாடலில் மடுக்களில் பாயும் வாளை மீன்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கும் காட்சியையும், எட்டாவது பாடலில் தலத்தின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் குறிப்பிடுகின்றார். ஒன்பதாவது பாடலில், பிரமனும் திருமாலும் காண்பதற்கரிய பெருமான், எவ்வாறு தனது அரிய நிலையை எளிய நிலையாக மாற்றிக்கொண்டு எளியவனாக காட்சி அளிக்கின்றார் என்றும் பத்தாவது பாடலில் கயிலை நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றார்.
அப்பர் பிரான் இந்த பதிகத்தின் உணர்த்துவதைப் போன்று நாமும், பெருமானை வழிபடும் மற்ற அடியார்களைக் கண்டு ஆனந்தம் அடைந்து, அவர்களுடன் பழகி, அவர்களைப் போன்று நாமும் சிவானந்தத்தில் திளைக்க முயற்சி செய்வோமாக.