முகப்பு
தினம் ஒரு தேவாரம்

46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 2

தன்னைப் பின்தொடர்ந்த பெண்கள் அனைவரையும்

Updated On : 13 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:23 AM

சிலை நவின்றதொரு கணையால் புரம் மூன்று எய்த
    தீவண்ணர் சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்தக்
கொலை நவின்ற களியானை உரிவை போர்த்துக் கூத்தாடித்
             திரிதரும் அக்கூத்தர் நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக் காணக் கடுவிடை
                  மேல் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே
                            புக்கு அங்கே மன்னினாரே

விளக்கம்

முதல் பதிகத்தில் கூறியவாறு, தன்னைப் பின்தொடர்ந்த பெண்கள் அனைவரையும் தவிக்கவிட்டு வலம்புரத்து திருக்கோயிலில் புகுந்த பெருமான், எவரையும் அழைத்துச் செல்லாதிருந்தால், அப்பர் நாயகியின் வருத்தம் குறைவாக இருந்திருக்கும் என்று தோன்றுகின்றது. ஆனால் பெருமான், தங்களை விட்டுவிட்டு, பார்வதி தேவியையும், கங்கை நங்கையையும் உடன் அழைத்துச் சென்றது, அப்பர் நாயகியின் வருத்தத்தை வளரச் செய்தது போலும். அவர்கள் இருவரை மட்டும் அழைத்துக்கொண்டு பெருமான் சென்றார் என்று தனது வருத்தத்தின் காரணத்தை குறிப்பிடும் பாடல். தன்னுடன் பூதகணங்களை அழைத்துச் சென்றவர் தங்களை அழைத்துச் செல்லாதது ஏன் என்ற நியாயமான கேள்வியும் இங்கே வெளிப்படுகின்றது. இங்கே மறையவர்கள் சொல்வதாக அப்பர் நாயகி கூறுவது நமக்கு மற்றொரு செய்தியையும் உணர்த்துகின்றது. எருதின் மீது விரைந்து சென்ற பெருமான், இந்த பெண்மணிகள் இருந்த திக்கினை நோக்கவில்லை போலும். அதனால் தான், பெருமான் சென்றதை இவர்கள் அறியவில்லை; பின்னர் மறையோர்கள் சொல்ல தெரிந்துகொண்டதாக இங்கே உணர்த்தப்படுகிறது.

சிலை = வில். நவின்ற = பொருந்திய. கொலை நவின்ற = மதம் மிகுத்ததால் கொலைக் குணத்துடன் திரிந்த யானை. களி யானை = மதத்தினால் ஏற்பட்ட மயக்கத்தில் இருந்த யானை. உரிவை = தோல். திரிதரும் = பல இடங்களிலும் திரிந்தவர்.

Advertisement

பொழிப்புரை

மேரு மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் பொருந்திய அம்பினைக் கொண்டு, வானில் பறந்துகொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்த சிவபெருமான் தீவண்ண மேனியராய் விளங்குகின்றார். தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட மதம் கொண்ட யானையை கிழித்து அதன் தோலினைத் தனது உடலில் போர்வையாக போர்த்திக்கொண்டவர் சிவபெருமான். அவரது செயலைப் போற்றி, சிறந்த வானவர்களும் அவரை வணங்குகின்றார்கள். கூத்தாடியவாறு, தாருகவனத்தின் பல இடங்களிலும் திரிந்த பெருமான், விரைந்து செல்லும் இடபத்தின் மேல் ஏறிக் கொண்டு, தன்னுடன் பார்வதி தேவியையும் கங்கை நங்கையையும் அழைத்துக் கொண்டு, பூதகணங்கள் சூழச் சென்றதை கண்டதாக, பல கலைகளிலும் பழகிய அந்தணர்கள் கூறியதை நாங்கள் கேட்டோம். எங்களை இங்கே தவிக்க வைத்து, பார்வதி தேவி மற்றும் கங்கையுடன் அவர் சென்று வலம்புரத்து கோயிலில் புகுந்து நிலையாக நிற்பது எங்களது வருத்தத்தை மேலும் அதிகரிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.