24. கருநட்ட கண்டனை - பாடல் 3
உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டுவிட்டு, இந்த
பாடல் 3
கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே
விளக்கம்
Advertisement
உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டுவிட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
பேரின்பத்தைத் தரவல்ல சியபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியான் என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல், எப்போதும் சிவபிரானை நினைந்து உருகும் அப்பர் பிரானின் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் அப்பர் பிரானும் அறியாத வகையில் அவரது மனத்தினுள்ளே புகுந்ததும் புகுந்த சுவடு காணப்படாததும், அப்பர் பிரானுக்கே வியப்பைத் தருகின்றது. அந்த வியப்பினை இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார்.
பொழிப்புரை
அழியும் பொருட்களையும் நிலையற்ற சிற்றின்பத்தையும் சிவபிரானிடம் வேண்டும் கல் மனத்தவர்களே, அவ்வாறு வேண்டி நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள்? நல்ல மனம் கொண்டு அழியாத முக்தி நிலையை வேண்டும் அடியார்கள் பொருந்தியுள்ள தில்லைச் சிற்றம்பலத்தில், பொன்மலை மீது வெள்ளிக்குன்று அமைந்ததுபோல் பொலிந்து நடனமாடும் சிவபிரான் யான் அறியாமல் எனது உள்ளத்தினுள்ளே புகுந்துவிட்டான். அவன் எவ்வாறு உள்ளே புகுந்தான் என்பதை நான் இன்னும் அறியவில்லை.
</p>