முகப்பு
தினம் ஒரு தேவாரம்

24. கருநட்ட கண்டனை - பாடல் 5

மனித்தப் பிறவியும் என்று குறிப்பிட்டு முந்தைய பாடலில் மனிதப் பிறவியின் இழிந்த நிலையை அப்பர் பிரான் குறிப்பிட்டார். அந்த

Updated On : 9 மே, 2016 at 6:30 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:44 PM

பாடல் 5

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்கு பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே

விளக்கம்

Advertisement

கூழைமை = கடமை.

திரிபுரம் எரிக்கச் சென்ற போது, தேவர்கள் அனைவரும் பல வகையில் சிவபிரானுக்கு உதவி செய்ய முன்வந்தனர். ஆனால் எவரது உதவியும் தேவைப்படாமல், வில்லினில் கோத்த அம்பினையும் பயன்படுத்தாது, தனது சிரிப்பினால் முப்புரங்களும் தீயில் அழியச் செய்தவன் சிவபெருமான். இந்த நிகழ்ச்சியையே அம்பு எய்தான் என்று குறிப்பிடாமல் அம்பு கோத்தான் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மனித்தப் பிறவியும் என்று குறிப்பிட்டு முந்தைய பாடலில் மனிதப் பிறவியின் இழிந்த நிலையை அப்பர் பிரான் குறிப்பிட்டார். அந்த இழிந்த நிலையினைப் போக்கும் வழியினை நமக்கு இங்கே சொல்லிக் கொடுக்கின்றார். இறைவனுக்கு அடிமையாக நாம் மாறுவதன் மூலம் நாம் உய்யமுடியும் என்று இங்கே கூறுகின்றார். பத்தருள்ளீர் என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த பாடல் சிவபிரானின் அடியார்களை நோக்கி பாடப்பட்ட பாடல் என்பதை நாம் உணரலாம். ஒன்று கொலாம் பதிகத்தின் கடைப் பாடலில் சொல்லியபடி பத்து செய்கைகள் உடையவர்களே அடியார்கள் என்று கூறியிருப்பதால் இங்கே அடியார்களை பத்தர் என்றே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

சிவபிரானின் அடியார்களுள் ஒருவராக விளங்கும் நீர் இழிந்த மனிதப் பிறவி எடுத்து விட்டோமோ என்று வருந்த வேண்டாம், தன்னை வேண்டி நின்ற பார்த்தனுக்கு பாசுபதம் அருளிச் செய்தவனும், அம்பினில் வில்லைக் கோத்த நிலையில் தனது சிரிப்பு ஒன்றினால் மூன்று புரங்களையும் எரித்த வல்லமை உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு அடிமையாக இருப்பதே நமது கடமையாகும். அவ்வாறு இருப்பதன் மூலம் நாம் நமது பிறவியை மதிக்க வேண்டும்.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.