முகப்பு
தினம் ஒரு தேவாரம்

24. கருநட்ட கண்டனை - பாடல் 9

பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு என்றும் பொன் மலையில் வெள்ளிக் குன்று என்றும் இறைவனின் திருமேனி

Updated On : 9 மே, 2016 at 6:33 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:46 PM

பாடல் 9

பொன் ஒத்த மேனிமேல் வெண்ணீறு அணிந்து புரிசடைகள்
மின் ஒத்து இலங்கப் பலி தேர்ந்து உழலும் விடங்க வேடச்
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடக் கண்டு இன்புற்றதால் இவ்விருநிலமே


விளக்கம்

Advertisement

விடங்க வேடம் = உளியால் செதுக்கப்படாத வேடம், இயல்பான வேடம்.

பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு என்றும் பொன் மலையில் வெள்ளிக் குன்று என்றும் இறைவனின் திருமேனி வண்ணத்தை முந்தைய பாடல்களில் விவரித்த அப்பர் பிரானின் மனதினை இந்தக் கோலம் கொள்ளைகொண்டுவிட்டது போலும். தன் மனதினை விட்டு அகலாத அந்த கோலத்தை மறுபடியும் நம் கண் முன்னர் இங்கே கொண்டு வருகின்றார். சிவபிரானின் நடனத்தைக் கண்டு இன்புற்ற அப்பர் பிரான், இந்த நடனத்தால் ஈர்க்கப்பட்டவர் வேறு யார் யார் என்று யோசிக்கின்றார். உலகம் அனைத்தும் இந்த நடனத்தின் அழகால் கவரப்பட்டு இன்புற்று இருக்கும் நிலையினை உணர்கின்றார். அந்த தகவலை இங்கே பதிவு செய்கின்றார்.

பொழிப்புரை

பொன்னை ஒத்த செந்நிறமான உடலில் வெண்ணிறமான திருநீற்றினை அணிந்து, முறுக்கப்பட்ட சடைகள் மின்னலைப்போல் ஒளி வீச, பிச்சை எடுத்துத் திரியும் சிவபெருமான் இயல்பான வேடம் கொண்டவர். அத்தகைய சிவபிரான், பெருமை வாய்ந்த தில்லையில் ஆடும் நடனத்தினைக் கண்டு இந்த உலகமே இன்பம் அடைகின்றது.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.