முகப்பு
தினம் ஒரு தேவாரம்

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 4

தனது தந்தை தாய் இருவரையும் அடுத்தடுத்து பறிகொடுத்த நிலையில். தமக்கை திலகவதியார் திருமணம் செய்யவிருந்த கலிப்பகையாரும் இறந்த நிலையில், தனது

Updated On : 18 மே, 2016 at 5:20 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:48 PM

பாடல் - 4

சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஓவாது = இடைவிடாது. செந்தீ என்பது எதுகை கருதி செந்தி என குறுகியது. செறிவு = நிறைந்த. அலசுதல் = வருந்துதல், சோர்வு அடைதல்.</p><p align="JUSTIFY">சிவபிரானது திருப்பாதங்களை நினைப்பதற்கும் அவனது திருவருள் கூட வேண்டும் என்று மணிவாசகப் பெருமான் திருவாசகம். (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி) சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரானே தனது வாழ்வில் சிவனருள் கூடாதபோது நடந்ததையும், பின்னர் அவனருள் கூடியபோது நடந்த நிகழ்சிகளையும் நினைத்துப் பார்க்கின்றார். அதனால் சிவபிரான் அருள் செய்யாவிடில் தான் செய்யக்கூடியது ஏதும் இல்லை என்ற முடிவினுக்கு வந்தவராக, உனக்கு அடிமையாக இருக்க நான் விரும்புகின்றேன்; நீ அதற்கு அருள் புரிய வேண்டும் என்று இங்கே இறைஞ்சுகின்றார்.</p><p align="JUSTIFY">தனது தந்தை தாய் இருவரையும் அடுத்தடுத்து பறிகொடுத்த நிலையில். தமக்கை திலகவதியார் திருமணம் செய்யவிருந்த கலிப்பகையாரும் இறந்த நிலையில், தனது வாழ்க்கை பிடிப்பு ஏதும் இன்றி சூனியமாக காணப்பட்ட போது, சமண சமயக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்பர் சமண சமயம் சார்ந்ததையும், துறவுக் கோலம் பூண்டதையும், அப்பர் பிரானுக்கு அப்போது சிவபிரான் அருள் இல்லாத காரணத்தால் நிகழ்ந்த நிகழ்வுகளாக சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.</p><p align="JUSTIFY">நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை</p><p align="JUSTIFY">அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின்</p><p align="JUSTIFY">நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்</p><p align="JUSTIFY">கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.</p><p align="JUSTIFY">பல வருடங்கள் சமணத் துறவியாக வாழ்ந்த பின்னர், சூலைநோய் வயப்பட்டு வருந்திய போது, சமணர்கள் முயற்சி செய்த மந்திர, தந்திரங்கள் ஏதும் பலனளிக்காமல் இருந்த நிலையில் தமது தமக்கையார் அருகில் இருந்தால் சூலை நோய்க்கு ஏதேனும் தீர்வு சொல்லியிருப்பார் என்ற எண்ணத்தில், தமக்கையாரை தான் இருக்கும் இடம் வருமாறு அழைத்தபோது, அவர் வர மறுத்த நிலையில், அப்பர் பிரான் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார். பின்னர் இரவோடு இரவாக தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்று அடைவது என்று தீர்மானம் செய்தார். இவ்வாறு முடிவு எடுத்தமைக்கு, அந்த நேரத்தில் சிவபிரான் திருவருள் கூடியதே காரணம் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்<br />எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்<br />ஒவ்வா இப்புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்<br />செவ்வாறு சேர் திலகவதியார் சேர்வன் என</p><p align="JUSTIFY">தில்லை வாழ் அந்தணர்களை குறிப்பிடும் ஞானசம்பந்தப் பெருமான், அவர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம், வேள்விகள் பல நடத்தி, அதன் பயனாக கலி புருடனின் ஆற்றலை வென்ற அந்தணர்கள் என்று கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">கற்றாங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே<br />செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய<br />முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே<br />பற்றா நின்றாரைப் பற்றாப் பாவமே</p><p align="JUSTIFY">அப்பர் பிரானும் தான் தில்லை சென்றபோது எங்கும் வேள்விகள் நடந்ததை கண்ணுற்றார். தான் கண்ட காட்சியை, சிகப்பு நிறம் கொண்ட தீயினை வளர்க்கும் வேள்விகள் இடைவிடாது செய்யப்பட்ட தில்லைத் சிற்றம்பலம் என்று இங்கே கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">சிவபிரானது நடனக் காட்சியை காண வந்த அப்பர் பிரான், அந்த நடனம் இரவும் பகலும் இடைவிடாது ஆடப்படுகின்றது என்பதை அறிகின்றார். அவ்வாறு இடைவிடாது நடனம் ஆடினால் சிவபிரானது திருப்பாதங்கள் வருந்துமே என்ற கவலை அவருக்கு ஏற்படுகின்றது. அந்த கவலையை இங்கே தெரிவிக்கின்றார். இந்த குறிப்பு நமக்கு திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டும். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த இராசசிம்ம பாண்டியன் என்ற மன்னன், நடனக் கலையைப் பயில்கின்றான். சிவபிரான் நடனம் ஆடுவது போல் ஒரு காலினை தரையில் ஊன்றி மற்றொரு காலினை எடுத்த நிலையில் நடனம் ஆடும் மன்னவன், சிறிது நேரம் கழித்த பின்னர் தனது ஊன்றிய கால் வலிப்பதை உணர்ந்தான். சிறிது நேரம் ஒற்றைக் காலினை ஊன்றி நின்ற தனக்கு வலிக்கும்போது, எப்போதும் ஒரு காலினை ஊன்றி நடமாடும் சிவபிரானுக்கு எவ்வளவு வலிக்கும் என்பதை நினைத்துப் பார்த்த மன்னன், உடனே மதுரை திருக்கோயிலுக்குத் சென்று வெள்ளியம்பலத்தில் நடனம் ஆடும் சிவபிரானை கால் மாற்றி ஆட வேண்டும் என்று வேண்டுகின்றான். இறைவனும் அவ்வாறே பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்கி கால் மாற்றி ஆடுகின்றான். பக்தனுக்கு அருளிய அதே கோலத்தில் இன்றும் மதுரையம்பதியில் கால் மாற்றி ஆடும் நிலையில் இறைவன் காட்சி தருவதை நாம் காணலாம். நமக்கெல்லாம் சிலையாக காட்சி தரும் சிவபிரான் அப்பர் பிரானுக்கு இரவும் பகலும் இடைவிடாமல் நடனம் ஆடும் பிரானாக காட்சி அளிக்கின்றார். அதனால் தான் அப்பர் பிரான் இறைவனின் திருப்பாதங்கள் வருந்துமே என்று கவலைப்பட்டு, அந்த கவலையை இந்தப் பாடலில் தெரிவிக்கின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">எனது தந்தையாகிய சிவபெருமானே, எனது சிந்தையில் திகைப்பு ஏதும் ஏற்பாடாவண்ணம், எனது மனதினில் நிறைந்த அன்புடன் நான் உனக்கு அடிமைத் தொழில் செய்வதற்கு, உனது திருவருள் கூடவேண்டும். எனது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள உனது திருவருள் இல்லாமல் என்னால் என்ன செய்ய முடியும்? சிவந்த தீயினை வளர்த்து இடைவிடாது அந்தணர்கள் வேள்விகள் நடத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில் இரவும் பகலும் இடைவிடாது நடனம் ஆடும் சிவபிரானே, உனது பாதங்கள் சோர்வடையும் என்று வருந்துகின்றேன்.</p><p align="JUSTIFY"> </p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.