25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 6
புவம்வளி கனல் புனல் என்று தொடங்கும் பதிகத்தின் (முதல் திருமுறை பதிகம் எண் 21) முதல் மூன்று பாடல்களில்
பாடல் 6
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரின் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்தவாறே
விளக்கம்
Advertisement
புவம்வளி கனல் புனல் என்று தொடங்கும் பதிகத்தின் (முதல் திருமுறை பதிகம் எண் 21) முதல் மூன்று பாடல்களில் ஞானசம்பந்தப் பெருமான், சிவபிரான் பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று வடிவங்களாக இருந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்வதாக கூறுகின்றார். இதே கருத்து திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி, எட்டாம் பாடலிலும் வலியுறுத்தப் படுகின்றது முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று குறிப்பிட்டு, முதல் தொழிலாகிய தோற்றத்தையும், நடுத் தொழிலாகிய படைத்தலையும் இறுதித் தொழிலாகிய அழித்தலையும் மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார்.
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணைவிரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிருமேனியும் காட்டித் திருப்பெருந்துறை உறைகோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
திருச்சதகத்தின் ஒரு பாடலிலும் மூவார் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி என்று குறிப்பிடும் மணிவாசகர் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் என்று சிவபிரான் மூன்று தொழில்களையும் செய்யும் நிலையினை குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
வழிபடும் அடியவர்களின் துயரத்தைத் தீர்ப்பவனே, தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்து ஆடுபவனே, உனது திருநடனத்தைக் காணும் அடியேன் உன்னை புகழ்ந்து பாடுவேன் ஆடுவேன், மூர்த்தியே என்றும் மூவரில் முதல்வனே என்றும் உன்னை புகழ்ந்து கூறுவேன், உனது திருநடனத்தைக் காணவே நான் அடியார்களுடன் கூட வந்துகொண்டு இருக்கின்றேன்.