முகப்பு
தினம் ஒரு தேவாரம்

44. முற்றுணை ஆயினானை - பாடல்  7

பாற்கடலை கடைந்தபோது, கொடிய ஆலகால

Updated On : 29 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:17 AM

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

விளக்கம்

அரவித்து = மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர் = விடுதல் இல்லாத தொண்டர். சிவபிரானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்: சிவபிரான் தனது தொண்டர்களின் வினைத் தொகையை அறவே நீக்கிவிடுவதால். அத்தகைய தொண்டர்கள் நரகத்துத் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சுந்தரர் அருளிய தில்லைப் பதிகத்தை (7.90) நினைவூட்டும். கூற்றுவனின் ஏவலாளர்கள் நம்மை செக்கில் இட்டு வருத்த முயல்கையில், சிவபெருமான் அந்த செயலைத் தடுத்து நம்மை ஆட்கொள்வார் என்று இந்த பதிகத்தின் பல பாடல்களில் சுந்தரர் கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழு நாளும்
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாம் அன்றே

பொழிப்புரை

வாசுகி என்ற பாம்பினை, மந்தர மலையில் சுற்றி, அமுதத்தினை எதிர்பார்த்து மிகுந்த ஆரவாரத்துடன் தேவர்களும் அசுரர்களும் ஒன்று கூடி, பாற்கடலை கடைந்தபோது, கொடிய ஆலகால நஞ்சு எழுந்தது: அனைவரையும் கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு, அந்த நஞ்சினை அமுதம் அருந்துவது போன்று மிகவும் விருப்பத்துடன் உண்டவர் சிவபெருமான். இத்தகைய பெருமையினை உடைய சிவபிரானுக்கு அடிமையாக எப்போதும் இருந்துகொண்டு, அவருக்குத் தொண்டு செய்யும் அடியார்களுடன், ஒன்று கலந்து இருக்கும் சிவபெருமான், அந்த அடியார்கள் நரகத்தில் வீழ ஒட்டாமல் காப்பாற்றுகின்றார். அவர்தான் நனிபள்ளி தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.