35. செஞ்சடைக் கற்றை - பாடல் 10
விசுத்தி சக்கரத் தானத்துக்கு காளத்தியும்,
பாடல் 10
பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்றேரி
Advertisement
ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே
விளக்கம்
பனிநிலா = குளிர்ச்சியைத் தரும் நிலவு.
ஞாலமாம் தில்லை = உலகத்தின் முக்கிய இடமாகிய தில்லை. புராணத் தகவல்களின்படி, பாரத நாட்டினை விராட் புருஷனின் வடிவமாகக்கொண்டால், அவனது இருதயத் தானத்துக்கு சிதம்பரமும், மூலாதாரத் தானத்துக்கு திருவாரூரும், சுவாதிட்டானத் தானத்துக்கு திருவானைக்காவும், மணிபூரகத் தானத்துக்கு அண்ணாமலையும், விசுத்தி சக்கரத் தானத்துக்கு காளத்தியும், ஆக்ஞா சக்கரத் தானத்துக்கு காசியும், சஹச்ரதளத் தானத்துக்கு கயிலையும் பொருந்துவதாக கூறுவார்கள். இதனை உணர்த்தும் திருவிளையாடல் புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தானம் = இடம். உடலின் முக்கியப் பாகமாக இருதயம் கருதப்படுவதால், தில்லையை ஞாலம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நீவிர் இருவர் = பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்கள்.
திருவளர் ஆரூர் மூலம் திருவானைக்காவே குய்யம்
மருவார் பொழில் சூழ் அண்ணாமலை மணிபூரம் நீவிர்
இருவர் கண்ட மன்றம் இதயமாம் திருக்காளத்தி
பொருவரும் கண்டமாகும் புருவ மத்தியம் காசி
மேற்கண்ட பாடலில் உள்ள பொருள் இறைவனின் வாக்காக திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்படுகின்றது. மதுரையில் மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்ற, பதஞ்சலியாரும் வியாக்ரபாதரும், அனைவரும் உணவு உட்கொள்ளச் சென்றபோது தாங்கள் அவ்வாறு செல்லாமல் இருந்தனர். அப்போது மணமகனாகிய சிவபெருமான் ஏன் என்று கேட்டதற்கு, தினமும் நடராஜப் பெருமானின் நடனக் கோலத்தைக் கண்ட பின்னரே தாங்கள் உணவு உட்கொள்வது பழக்கம் என்று கூறினார்கள். அப்போது இறைவன் அவர்களிடம், உலகமே வடிவமாகிய புருடனுக்கு தில்லைத் தலம் இருதயம் என்றும் மதுரையம்பதி துவாதசாந்தப் பெருவெளி என்றும் கூறினார். மேலும் உங்களுக்கு அந்த திருக்கூத்துக் காட்சியை நான் இங்கே அருளுகிறேன் என்று கூறினார். இறைவனைப் பணிந்த முனிவர்கள் இருவரும், விராட்புருஷனின் மற்ற அங்கங்கள் யாவை என்று வினவ, சிவபிரான் அளித்த விடைதான் மேற்கண்ட பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. முனிவர்கள் இருவரும், சுந்தரேஸ்வரர் சன்னதி செல்ல, சன்னதிக்கு இடது புறத்தில் வெள்ளியம்பலம் எழ, அந்த மண்டபத்தில் இறைவனது திருக்கூத்தினை இருவரும் கண்டுகளித்தனர். இரண்டு முனிவர்களின் கோரிக்கைக்கு இணங்கி நடராஜப் பெருமான் அங்கே நமக்காக அருள் பாலிக்கின்றார். பெருமானின் சன்னதியில் நாம், வெள்ளிக் கவசம் சாற்றப்பட்ட, முனிவர்களின் உருவச்சிலைகளை இன்றும் காணலாம்.
பொழிப்புரை
அனைத்து உயிர்களும் இறந்த பின்னரும் இருக்கும் பாலனாகவும், அனைத்து உயிர்களுக்கு முன்னே தோன்றியைமையால் அனைவர்க்கும் மூத்தவனாகவும் இருக்கும் இறைவன், குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனைத் தனது நெற்றியில் வைத்துள்ளான். அந்த சந்திரனின் ஒளி இவரது சடையில் தெரிகின்றது. காளையை வாகனமாகக் கொண்ட பெருமான், மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலன் மீது கோபம் கொண்டு, காலால் அவனை உதைத்தவர். உலத்தவரைக் காக்கும் பொருட்டு விடம் உண்ட காரணத்தால், நீல நிறத்துடன் திகழும் கழுத்தினை உடையவர். இவர் தான், உலகத்தின் இருதயமாக கருதப்படும் தில்லைச் சிற்றமபலத்தில், நீண்ட தீயின் இடையே நின்று கூத்தாடுகின்றார்.