36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 3
வேடம் தரிப்பவர்கள் தங்களது அழகுக்கு மேலும்
பாடல் 3
வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே
விளக்கம்
Advertisement
பொதுவாக, வேடம் தரிப்பவர்கள் தங்களது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வேடங்களையே விரும்பி ஏற்பார்கள். ஆனால், பெருமானோ வேடுவக் கோலத்தை விரும்பி ஏற்றவராக உள்ளார். அவரது உண்கலனோ காய்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும், அருவருக்கத்தக்க மண்டையோடு.
பொழிப்புரை
அழகு ஏதும் இல்லாத வேடுவக் கோலம் தாங்கினாலும், அனைவரும் அருவருக்கும் நிலையில் உள்ள காய்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் மண்டையோட்டினை கையில் ஏந்தி திரியும் கோலத்துடன் இருந்தாலும், பெருமானின் திருமேனி வியப்பு ஊட்டும் அழகுடன் காணப்படுகின்றது. பெருமை வாய்ந்த நகராகிய நாரையூரில் உறையும் பெருமானின் நடனம் ஆடும் பசுமையான திருவடிகள் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன.