முகப்பு
தினம் ஒரு தேவாரம்

36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 5

உலையில் வடித்து எடுத்தது போன்று மிகவும்

Updated On : 10 செப்டம்பர், 2016 at 5:43 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

பாடல் 5

வடிகொள் வெண்மழு மான் அமர் கைகளும்
பொடிகொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர் நாரையூர்
அடிகள் தம் வடிவம் அம்ம அழகிதே

விளக்கம்

Advertisement

வடிகொள் = உலையில் வடித்து எடுத்தது போன்று மிகவும் கூரிய முனையினைக் கொண்ட. நடிகொள் = நடமாடும் தன்மை கொண்ட. புரை மேனி = ஒத்த மேனி. நடிகொள் நன்மயில் என்பதை தலத்தின் தன்மையை குறிப்பிடும் சொல்லாக கருதி, மயில்கள் மகிழ்ந்து நடமாடும் குளிர்ந்த சோலைகள் உடைய நாரையூர் என்று விளக்கம் அளிப்பதும் உண்டு. பெருமானின் கோலத்தை ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு அதன் அழகை வியந்து பாடும் பாடல்கள் கொண்ட பதிகம் என்பதால். நடிகொள் நன்மயில் என்ற தொடரினை பெருமானுடன் இணைத்து பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை

உலையில் வடித்தெடுத்தது போன்று கூர்மையாகவும் வெண்மை நிறத்துடனும் காணப்படும் மழு ஆயுதத்தையும், தாவி குதிக்கும் மான்கன்றினையும் தனது கைகளில் கொண்டுள்ள தன்மையும், வெண்மையான திருநீற்றுப் பொடி பூசப்பட்ட, செம்பவளத்தை ஒத்த நிறத்தில் காணப்படும் திருமேனியும், நடனம் ஆடுவதில் திறமை பெற்ற மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை சேர்ந்த திருமேனியும் கொண்டுள்ள நாரையூர் அடிகளின் திருவடிவம் மிகவும் வியப்பினை அளிக்கும் முறையில் அழகாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.