36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 9
பலரும் இரவில் பிச்சை எடுக்க,
பாடல் 9
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவின் நின்று எரி ஆடலும் நீடுலாம்
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே
விளக்கம்
பலரும் இரவில் பிச்சை எடுக்க, வித்தியாசமாக நண்பகலில் பிச்சை எடுக்கும் பெருமான் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், பகலில் வெளிச்சத்தில் அனைவரும் காண நடமாடாமல் இரவில் சுடுகாட்டினில் நின்று பெருமான் நடமாடும் தன்மையினை இந்த பாடலில் உணர்த்துகின்றார். முரலும் = இனிய இசையோடு ஒலிக்கும். கின்னரம் = ஒரு வகை நரம்பு வாத்தியம், யாழ் போன்றது. மொந்தை = பறை போன்ற இசைக்கருவி.
பொழிப்புரை
கின்னரம் எனப்படும் இசைக்கருவி இன்னிசை எழுப்பவும், மொந்தை கொண்டு பூத கணங்கள் முழங்கவும், இரவினில் இடுகாட்டில் நெருப்பின் நடுவே நின்று ஆடும் பெருமான், தனது நீண்ட அலைகளைக் கொண்டு ஆரவாரம் செய்யும் கடலால் சூழப்பட்ட உலகினில் சிறந்ததாக விளங்கும் நாரையூர் நகரத்தில் நம்பனாக வீற்றிருக்கின்றார். அவர் பாம்பினை, அணிகலனாக பூண்டிருப்பது மிகவும் அழகாகவும் வியப்பினைத் தருவதாகவும் உள்ளது.
Advertisement