69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 5
அமுதம் போன்று
பாடல் 5:
கருகு கண்டத்தன் காய் கதிர்ச் சோதியன்
பருகு பால் அமுதே எனும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே
விளக்கம்:
கருகு=கருகிய: கூவிளம்=வில்வம்: அருகு=அருகே; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தான் குறிப்பிட்ட தலைவியின் தன்மையினை இந்த பாடலிலும் தாய் குறிப்பிடும் பாடல். காய் கதிர்=எரிக்கின்ற கதிர்களை உடைய சூரியன். பாலும் அமுதமும் பருகும் போது இனிமையாக இருப்பதுடன், அதனை உட்கொள்வார்க்கு வளமையினையும் அளிக்கின்றன. அது போன்று இறைவன், தன்னை அடியார்களுக்கு இனிமையான சிவானந்தப் பேரமுதினை அளிப்பதுடன், அவர்களது ஆன்மா முக்தி நெறி அடைவதற்கு வழிவகுத்து, பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கும் வழி வகுக்கின்றது. எனவே தான் பால், அமுதம் ஆகிய பொருட்கள் இறைவனுக்கு உவமையாக சொல்லப்படுகின்றன.
பொழிப்புரை:
கரிய நிறத்துக் கழுத்தினை உடையவனே என்றும், எரிக்கின்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போன்ற ஒளியினை உடையவனே என்றும், பருகுவதற்கு இனிய பால் மற்றும் அமுதம் போன்று தன்னை நினைக்கும் அடியார்களுக்கு இனியவனாக இருப்பவனே என்றும் இறைவனது பண்புகளை சொல்லியவாறு இருக்கும் எனது மகள், இந்நாள் வரை அவனது அருகில் சென்றவள் அல்லள். எனினும் அவன் மீது கொண்டுள்ள காதலின் மிகுதியால், ஆவடுதுறை தலத்தில் உறையும் ஒப்பற்ற இறைவன் தான், தன்னுடைய தலைவன், அதாவது தன்னைக் மனைவியாக அடையப் போகும் தலைவன் என்று கூறுகின்றாள்.