69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 8
காதல் மயக்கத்தில்
பாடல் 8:
பிறையும் சூடி நல் பெண்ணோடு ஆணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்புனல் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே
விளக்கம்:
நிறை=ஒழுக்கம்; கற்பு; நீர்மை=அழகு; முந்தைய பாடலில் இறைவன் மீது கொண்டுள்ள காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மகள் என்று கூறிய தாய், அந்த மயக்கம் தந்த செருக்கு தன்னுடைய பெண்ணிடத்தில் ஏற்படுத்திய மாறுதலை இங்கே குறிப்பிடுகின்றாள். இறைவனை என்னை உடையவன் என்று உரிமையோடு அவள் அழிப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனை, காக்கும் பொருட்டுத் தனது தலையில் சூடியவனாகவும், அம்மையப்பனாகவும் உள்ள இறைவன், எனது கற்பினையும், அழகினையும் எனது உள்ளத்தினையும் கொள்ளை கொண்டவனாக உள்ளான். வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலைகளை உடைய ஆவடுதுறை தலத்தில் உள்ள இறைவன், தன்னை உடையவன் என்றும் இந்த பெண் கூறுகின்றாள். இறைவனே நீ இவளை ஏற்றுக்கொண்டு, இவள் ஏமாற்றம் அடையாமல் காக்க வேண்டும்.
Advertisement