முகப்பு
தினம் ஒரு தேவாரம்

69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 10

வலிமை மிகுந்தவனாக

Updated On : 6 அக்டோபர், 2017 at 10:35 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM

பாடல் 10:
    பக்கம் பூதங்கள் பாடப் பலி கொள்வான்
    மிக்க வாளரக்கன் வலி வீட்டினான்
    அக்கு அணிந்தவன் ஆவடு தண்டுறை
    நக்கன் என்னும் இந் நாணிலி காண்மினே

விளக்கம்:
நக்கன்=குறைந்த ஆடைகளை உடையவன். தனது மகளின் நெஞ்சத்தையும் கற்பையும் கவர்ந்து கொண்ட பெருமான் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட தாய், தனது பெண் நாணம் இழந்ததால் நாணம் ஏதுமின்றி இறைவனை நக்கன் என்று அழைப்பதாக கூறும் பாடல். நெருக்கம் ஏற்பட்டால் தான் நாணம் விலகும். இறைவனுடன் தான் மிகவும் நெருங்கி விட்டதாக உணரும் எனது மகள், நாணம் ஏதும் இல்லாதவளாக உள்ள நிலை, அவள் பெருமானை மிகவும் நெருங்கி விட்டாள் போலும் என்று எனக்குத் தோன்றுகின்றது. மனத் தூய்மை இல்லாமல் இருந்த ஆன்மா படிப்படியாக வளர்ந்து இறைவனை நெருங்கியதை உணர்த்துவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.   

பொழிப்புரை:
பூதங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, பாடல்கள் பாடியவாறு பலி ஏற்கச் சென்றவனே என்றும், உடல் வலிமை மிகுந்தவனாக விளங்கிய அரக்கன் இராவணனின் வலிமையைக் கெடுத்து அவனது செருக்கினை அழித்தவனே என்றும், எலும்பு மாலை அணிந்தவனே என்றும், குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் இறைவனே என்றும் அழைத்து வந்து எனது மகள், தான் இறைவனுடன் கொண்டுள்ள நெருக்கத்தினால் நாணம் இழந்தவளாக, இறைவனை நக்கன் என்று அழைக்கின்றாள். நீங்கள் எல்லோரும் இதனைக் காண்பீர்களாக.  

Advertisement

முடிவுரை: 
அகத்துறை பாடல்கள் கொண்ட பதிகமாக இருந்தாலும், படிபடிப்படியாக ஆன்மா, இறைவனுடன் ஒன்று சேரும் தனது நோக்கத்தில் வெற்றி காண்கின்றது என்பதை உணர்த்தும் பதிகமாக உள்ளது. முதல் பாடல் மூலம், நமது ஆன்மா தூய்மையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தப் படுகின்றது. தூய்மை அடைந்த ஆன்மா, இறைவனுடன் தான் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடல் மூலம் இறைவனின் நாமங்களை மறுபடியும் மறுபடியும் சொல்லியவாறு இறைவனிடம் நமக்குள்ள பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நான்காவது பாடலில், இறைவனுடன் தொடர்பு கொண்டுள்ள பொருள் ஏதேனும் நம்முடன் எப்போதும் இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் அளவுக்கு நாம் இறைவன் பால் கொண்டுள்ள காதல் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், நமது ஆன்மாவுக்கு இறையுணர்வு ஊட்டி, அப்பர் பிரான் நம்மை வழிப்படுத்துகின்றார். அடுத்த ஆறு பாடல்களில் அப்பர் நாயகியின் காதலின் தீவிரம் உணர்த்தப்படுகின்றது. இதன் மூலம் ஆன்மாவும், இறைவன் மீது கொண்டுள்ள பக்தியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகின்றது.

இறைவனைப் பற்றி பேசுவதில் நாணம் ஏதும் கொள்ளாத அளவுக்கு, இறைவனுடன் நெருக்கமான நிலையை அடைந்துள்ள அப்பர் நாயகியின் நிலையினை உணர்த்துவதன் மூலம், மேலே குறிப்பிட்ட அடுத்தடுத்த நிலைகள் மூலம் ஆன்மாவும் இறைவனுடன் நெருங்கி அவனுடன் ஒன்றி இருந்து, நிலையான பேரானந்தத்தை அடையலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அப்பர் பிரானின் வழியில் நாமும் சென்று இறைவனுடன் ஒன்றி இணைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, நிலையான பேரானந்தம் அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.