67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 3
பிறப்பு இறப்புச் சுழற்சியில்
பாடல் - 3
உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
உற்ற நோய் = உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள். செற்றவர் = பகைவர். செறுதல் = வெல்லுதல். கலந்து = உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல். உலத்தல் = பாசப் பற்றுகளை அறுத்தல். அலத்தல் = பாசப் பற்றுகளால் துயர் உறுதல். அற்றவர் = பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள். அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
Advertisement
பொழிப்புரை
உயிரினை, அதனை பீடித்துள்ள வினைத் தொகுதிகளின் பிடியிலிருந்தும் மூன்று மலங்களின் பிடியிலிருந்தும் மீட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியில், மறுபடியும் சிக்காத வண்ணம் உயிருக்கு உறுதுணையாக இருந்து காக்கும் வல்லமை படைத்தவர். சிவபெருமான். அவர் தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளுடன் எரித்து வென்றவர். பாசப் பற்றுகளால் துயருற்று, படிப்பினையைப் கற்றுக்கொண்ட கற்றவர்கள், ஒன்று கூடி, தங்களது பாசப் பற்றுகளை முற்றிலும் அறுத்தும், தங்களது உள்ளமும் உயிரும் இறையுணர்வுடன் கலக்குமாறும், சிவபெருமானைத் தொழுது புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு பாசப் பற்றுகளை விட்டொழித்த அடியார்களுக்கு அன்பராக, ஆவடுதுறையில் உறையும் இறைவன் திகழ்கின்றான்.