முகப்பு
தினம் ஒரு தேவாரம்

67.மாயிரு ஞாலம் எல்லாம் -பாடல் 5

தவநிலையை கலைத்த மன்மதனை

Updated On : 6 அக்டோபர், 2017 at 10:39 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:54 PM


    பொடியணி மெய்யர் போலும் பொங்கு வெண்ணூலர் போலும்
    கடியதோர் விடையர் போலும் காமனைக் காய்வர் போலும்
    வெடிபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்
    அடிமையை ஆள்வர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

கடியதோர் = விரைந்து செல்லும். விடை = பெருமானின் வாகனமாகிய நந்தி. தலையர் = தலை மாலையை உடையவர். வெடிபடு = சுடுகாட்டில் நெருப்பு மூட்டபோது, சூட்டினால் வெடித்த தலை. ஊழிக்காலத்தில் அழிந்து போன உடல்களின் தலையை, மாலையாக சிவபெருமான் அணியும் செயல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

பொழிப்புரை
திருமேனி எங்கும் திருநீறு பூசியவராய், ஒளிவீசும் வெண்ணூல் அணிந்தவராய், விரைந்து செல்லக்கூடிய எருதினை வாகனமாக ஏற்றவராய் உள்ள இறைவன், தனது தவநிலையை கலைத்த மன்மதனை வெகுண்டு, நெற்றிக்கண்ணை விழித்து எரித்தார். தான் ஒருவனே என்றும் நிலைத்து நிற்பவன் என்பதை உணர்த்தும் வகையில், ஊழிக் காலத்தில் அழிந்துபோகும் உடல்களின் தலைகளை மாலையாக கோர்த்து அணிந்துகொள்ளும் சிவபெருமான், விருப்பமுடன் தன்னைத் தொழும் அடியார்களின் அடிமைத் திறத்தை பெரிதும் விரும்புகின்றார்; அத்தகைய அடியார்களை அவர் ஆட்கொள்கின்றார், அவர் தான் ஆவடுதுறையில் உறையும் பெருமான் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.