67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 8
கயிலாய மலையில்
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி எத்த
நந்தி மாகாளர் என்பார் நடுவுடையர்கள் நிற்பச்
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
நடுவுடையார்கள் = நந்திக்கும், மாகாளருக்கும் இடையே உள்ள காவலர்கள். யமுனை, இலக்குமி, சரஸ்வதி, கணபதி, கங்கை. இந்த ஏழு காவலர்களும், கயிலாயத்தின் மேற்கு நுழைவாயில் உள்ள காவலர்கள் என்று கூறுவார்கள். திரிபுரத்து அரக்கர்களின் கொடுமை தாங்கமுடியாத தேவர்கள் கயிலாயம் சென்று முறையிட்ட நிகழ்ச்சியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.
Advertisement
பொழிப்புரை
கயிலாய மலையில் காவலர்களாக நின்றவர்களைத் தாண்டி, உள்ளே சென்ற வானவர்கள், சிவபெருமானை முறையாக வணங்கிய பின்னர் அவரிடம் திரிபுரத்து அரக்கர்கள் செய்த கொடுமைகளை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், தன்னை வழிபடாமல் தவறான வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களை, அவர்கள் இருந்த கோட்டைகளுடன் சேர்த்து எரித்தார். மாலை நேரத்தில் வானத்தில் தோன்றும் அழகான பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற சிவபெருமான், ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார்.