முகப்பு
தினம் ஒரு தேவாரம்

69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 2

அன்பின் ஆழத்தை

Updated On : 6 அக்டோபர், 2017 at 10:30 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM

பாடல் 2:
    தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
    பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
    அளவு கண்டிலள் ஆவடு தண்டுறை
    களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே

விளக்கம்:

தவளம்=வெண்மை: களவு=களவியல் ஒழுக்கம்; சங்க நூல்கள், காதலை களவியல் கற்பியல் என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றன. தலைவனும் தலைவியும் ஏனையோர் அறியாதவாறு சந்தித்துக் கொள்ளுதல் களவியல் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. அவ்வாறு சந்தித்த இனிமையான நிகழ்வுகளை மனதினில் நினைத்து மகிழும் தலைவியின் நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எவரும் அறியாதவாறு சந்தித்தனர் என்பதால், அந்த இன்ப நினைவுகளை, தனக்கு நெருக்கமான தோழிகளிடம் கூட பகிர முடியாமல், தனக்குத் தானே அந்த நினைவுகளை அசை போட்டவாறு நினைத்து ரசிக்கும் இன்பம், அந்த இன்பத்தினால் முகத்தில் மலரும் உணர்ச்சிகள் போன்ற மாற்றங்களை கவனித்த தலைவியின் தாய் கூறும் முகமாக அமைந்த பாடல். சென்ற பாடலில், தனது தலைவனாகிய இறைவனுடன்  சேருவதற்கான பக்குவத்தை அடையாத பெண் என்று குறிப்பிட்ட தாய், இந்த பாடலிலும் இறைவனின் முழு அன்பின் அளவினைக் காணாத மகள் என்று கூறுகின்றாள். தனது மனம் கவர்ந்த தலைவனாகிய இறைவனுடன் இணையா விட்டாலும், அவனுடன் இணைந்தது போன்று இனிய கற்பனைகளை மனதினில் வளர்த்துக் கொண்டு அந்த கற்பனைகளை அசை போட்டபடி முக மலர்ச்சியுடன் இருந்த நிலையினை, அப்பர் நாயகியின் தாய் குறிப்பிடுகின்றாள். 

இறைவனின் பூரணமான அன்புக்கு பாத்திரமாகும் அளவுக்குத் தான் தூய்மையானவன் அல்லன் என்ற உணர்ச்சி (முதல் பாடலில் வெளிப்படுத்திய கருத்து), தனது அடி மனதினில் இருந்த போதிலும், இறைவனுடன் சேர வேண்டும் என்ற ஆர்வத்தின் மிகுதியால், தனது ஆன்மா இறைவனுடன் சேரும் நிலையை கற்பனை செய்வதாக அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.     

Advertisement

பொழிப்புரை:
வெண்மை நிறத்துடன் காணப்படும் சந்திரனின் ஒரு பகுதியான பிளவு பட்ட பிறையைத் தனது சடையில் சூடிய பெருமானை, பிஞ்ஞகத் தலைக் கோலம் அணிந்த பெருமானின் அன்பின் ஆழத்தை அறியும் பக்குவம் அற்றவள் எனது பெண். இருந்தாலும் பெருமான் மீது தான் வைத்துள்ள அளவு கடந்த அன்பின் காரணத்தினால், பெருமானுடன் இணைந்து இருந்ததாக கற்பனை செய்து முகம் மலர்ந்து மகிழ்கின்றாள். களவியலில் ஈடுபட்டு அந்த நினைவுகளால் மகிழும் தலைவியின் மகிழ்ச்சிக்கு காரணாம் எவரும் அறியார். அது போன்று எனது மகளும் மகிழ்ந்து இருப்பதன் காரணத்தை எவரும் அறிய இயலாது என்பதால் அவள் முகம் மலர்ந்து மகிழ்ந்து இருக்கும் நிலை களவியலில் ஈடுபட்டுள்ள தலைவியின் நிலை ஒத்து காணப்படுகின்றது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.