69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 4
இறுமாந்து இருத்தல்
பாடல் 4:
கார்க் கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தான்
வார்க் கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து இவள்
ஆர்க் கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே
விளக்கம்:
தார்=மாலை; தாழும்=விரும்பும்; தாழும் என்ற சொல்லுக்கு நிலை தாழ்தல் என்ற பொருள் கொண்டு, ஆன்மா ஆணவ மலத்தால் தான் மயங்கியிருக்கும் நிலையிலிருந்து தாழ்தல் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. காதலனைப் பிரிந்துள்ள நிலையில் தனது காதலனுடன் தொடர்பு கொண்ட பொருள் ஏதேனும் தனதருகில் இருந்தால், அந்த பொருள் தனது ஏக்கத்தைச் சிறிதேனும் குறைக்கும் என்று தலைவி நினைக்கின்றாள். பெருமானின் உருவத்தைத் தனது மனக் கண்ணினால் காணும் தலைவிக்கு, பெருமான் தேவியுடன் இணைந்து இருக்கும் கோலமும், இருவரது மார்பினையும் தழுவியவாறு இருக்கும் கொன்றை மாலையும் தெரிகின்றது. அந்த கொன்றை மாலைக்கு கிடைத்த பேறு தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குகின்றாள். அவளது ஏக்கத்தினைப் புலப்படுத்தும் பாடல். இறுமாந்து என்ற வினைச்சொல்லை, பார்வதி தேவியுடன் பொருத்தி. இறைவனுடன் தொடர்பு கொண்ட கொன்றை மாலை தன்னுடனும் தொடர்பு கொண்டு இருப்பதால் உமை அம்மை இறுமாப்புடன் காணப்படுகின்றாள் என்று கூறுவதும் பொருத்தமே. இறைவனுடன் இணையும் எவரும் இறுமாந்து இருப்பது நியாயம் தானே.
இறுமாந்து இருத்தல் என்றவுடன் நமக்கு அங்கமாலை பதிகத்தின் (4.09) பதிகத்தின் பாடல் நினைவுக்கு வருகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போர்க்குணம் கொண்ட மான் கன்றின், கோபத்தைத் தணிவித்து, அதனைத் தனது கையில் ஏந்திய சிவபிரானின், பெருமை வாய்ந்த திருவடியைச் சென்றடைந்து, சிவகணத்துள் ஒருவராக, கருதப்படும் நிலையினை அடைந்து, இறுமாப்புடன் இருப்பேன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
இறுமாந்து இருப்பன் கொலோ -- ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ
Advertisement
பொழிப்புரை:
நீர்த்திவலைகள் நிறைந்ததால் கரிய நிறத்துடன் காணப்படும் மேகத்தை போன்ற கழுத்தினை உடையவனே என்று இறைவனை அழைக்கும் எனது மகள், கச்சினால் இறுகக் கட்டப்பட்ட மெல்லிய மார்பினை உடையவளாக இருக்கும் பார்வதி தேவியுடன் இறைவன் இணைந்து இருப்பதையும், அந்த நிலையில் அவர்கள் இருவரது மார்பினைத் தழுவி இருக்கும் கொன்றை மாலை அவர்களுடன் தான் கொண்டிருந்த நெருக்கத்தினால் இறுமாந்து இருப்பதையும் காண்கின்றாள். அந்த காட்சி, அவளது தனிமைத் துன்பத்தை மேலும் அதிகரித்து அவளது நெஞ்சினை சுட்டெரிக்கின்றது. குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் சூடி இருக்கும் கொன்றை மாலையாவாது தனக்கு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் அந்த மாலைக்காக காத்து நிற்பதை, எனது மகளின் கோலத்திலிருந்து நீங்கள் உணரலாம். ஆவடுதுறை இறைவனே, அந்த மாலையினை அவளுக்கு அளித்து அவளது ஏக்கத்தைத் தீர்ப்பீராக.