முகப்பு
தினம் ஒரு தேவாரம்

63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 6

இதழ்கள் நிறைந்த கொன்றை மலர்

Updated On : 19 ஜூன், 2017 at 12:33 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:08 PM

ஏடேறு மலர்க் கொன்றை அரவு தும்பை இளமதியம் எருக்கு
            வான் இழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் செம்பொன்
    மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ் வேளூர் ஆளும் கோவைக் கிறி பேசி
    மடவார் பெய் வளைகள் கொள்ளும்
காடவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

விளக்கம்

ஏடு = இதழ்கள். வான் இழிந்த = வானிலிருந்து இறங்கிய. சேடு = அழகு. கிறி = பொய்கள். காடவன் = அதிசயத்தக்க திறமை உடையவன். காடம் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. கேடிலி அப்பர் என்பது கீழ்வேளூர் தலத்தில் உறையும் இறைவனின் திருநாமம். மடவார் = இளைய பெண்கள். கேடிலி என்பதற்கு நீங்காமல் இருப்பவன் என்ற பொருளும் பொருந்தும். இங்கே சிந்தைக் கேடிலி என்று கேடு இல்லாத தன்மையினை அடியார்களின் சிந்தனையுடன் இணைத்துச் சொல்லியிருப்பதால், அடியார்களின் சிந்தையிலிருந்து நீங்காமல் இருப்பவன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். 

Advertisement

பொழிப்புரை

இதழ்கள் நிறைந்த கொன்றை மலர், பாம்பு, தும்பைப்பூ, பிறைச் சந்திரன், எருக்கு, வானத்திலிருந்து கீழே வேகமாக இறங்கிய கங்கை நதி ஆகியவற்றைத் தாங்கியவாறு மிகுந்த அழகுடன் விளங்கும் சடையினை உடையவனும்; தேவர்களின் தலைவனும்; சிவந்த நிறத்தில் காணப்படும் பெரிய மலை போன்று விளங்குபவனும்; தன்னைச் சார்ந்த அடியார்களின் சிந்தனையிலிருந்து என்றும் நீங்காது இருப்பவனும்; கீழ்வேளூர் தலத்தில் உறையும் இறைவனும்; பலியேற்கச் சென்றபோது தனது அழகாலும் இனிமையும் பொய்யும் நிறைந்த மொழிகளாலும் தாருகவனத்துப் பெண்களின் மனதினைக் கவர்ந்து அவர்களது வளையல்கள் கழன்று விழச் செய்தவனும், ஏனையோர் அதிசயிக்கும் வகையில் பல செயல்களைச் செய்யும் திறமை வாய்ந்தவனும்; கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.