64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 3
திருநீற்றினை உடல் முழுதும் பூசியவனே
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே
கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே
விளக்கம்
அறம் = உறுதிப் பொருளாகிய சிவ ஆகமங்கள். நிழல் = ஒளி. பாற்கடலைக்
கடைந்தபோது நஞ்சு வெளிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பல தேவாரப்
பாடல்களிலும் பாற்கடல் கடைந்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. கொடிய விடத்தின் கருமையான நிறத்தினால் பாற்கடலும் அதன் நிறம் மாறி கருமையாக காட்சி அளித்தது என்பதை உணர்த்த இவ்வாறு கூறுகின்றார் போலும். கந்த புராணத்தில் திருமாலின் நிறம் கருநிறமாக மாறியது பாற்கடலிலிருந்து எழுந்த நெஞ்சின் தாக்கத்தால் என்று கூறப்படுவதை நாம் இங்கே நினைவுகூரலாம். நஞ்சினால் நிறம் மாறிய பாற்கடலை இங்கே கருமையான கடல் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
Advertisement
பொழிப்புரை
திருநீற்றினை உடல் முழுதும் பூசியவனே, ஒளி வீசும் மழு ஆயுதத்தைக் கையில்
ஏந்தியவனே, இடபத்தை வாகனமாக ஏற்றுக்கொண்டு உகந்து ஏறுபவனே, வெண்மை நிறம் கொண்டிருந்த பாற்கடலின் நிறத்தினை விடம் கருமையாக மாற்றிய பின்னர் அந்த பாற்கடலிலிருந்து எழுந்த அமுதம் போன்று இனிப்பவனே, நான்கு வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் சைவ ஆகமங்களையும் தனது வாய்மொழியால் உரைத்து உணர்த்தியவனே, பார்வதி தேவியாகிய பெண்ணைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.